
”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா
காங்கிரஸை ஓரங்கட்டி வந்த மம்தா பானர்ஜி, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பையும் புறக்கணித்து தொகுதி மறுவரையறை கூட்டத்திற்கு வராமல் நழுவியுள்ளது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 3 முக்கிய கட்சிகளும் வராததன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எம்.பி தொகுதிகள் குறையும் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றிய தென் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இந்த விவகாரத்தில் மற்ற மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு 29 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 24 கட்சிகள் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் அழைப்பை ஏற்று கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஒரே இடத்தில் குவிந்தனர்.
ஆனால் ஆந்திராவில் இருந்து ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த கூட்டத்தை முழுமையாக புறக்கணித்துள்ளார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சார்பில் அக்கட்சியின் எம்.பி உதய் ஸ்ரீனிவாஸ் சென்னை வந்து பவன் கல்யாண் கொடுத்த கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சேர்த்துள்ளார். ஆனால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார். இந்த 2 கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் தொகுதி மறுவரையறை கூட்டத்திற்கு வரவில்லை.
அதேபோல் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கூட்டத்தை புறக்கணித்துள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஒத்த கருத்துடன் இருந்தாலும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது விவாதமாக மாறியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஆரம்பம் முதலே பாஜக மீது வலுவான விமர்சனங்களை வைப்பதில்லை என்ற பேச்சு இருக்கிறது. அதனால் அவர் கூட்டத்தை புறக்கணித்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர்.
இதில் மிக முக்கியமாக இந்தியா கூட்டணியில் இருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார். ஏற்கனவே மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் முற்றி வருகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸுக்கு எதிரான அரசியலை தீவிரமாக எடுத்து களமாடி வருகிறார் மம்தா பானர்ஜி. இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பையும் புறக்கணித்து கூட்டத்திற்கு வராமல் நழுவியுள்ளார் மம்தா பானர்ஜி. கூட்டணியில் இருந்து கொண்டும் அவர் வராதது இந்தியா கூட்டணிக்குள் புகைச்சலை கிளப்பியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தொகுதி மறுவரையறையால் மேற்கு வங்கத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காததால் அவர் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாகவும் சொல்கின்றனர்.