
”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜக
மணிப்பூரில் பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக சொல்லி ஷாக் கொடுத்துள்ளது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம். இதன் பின்னணியில் நிதிஷ் குமாரின் பக்கா ஸ்கெட்ச் இருப்பதாக கூறப்படுகிறது.
மணிப்பூரில் நோங்தோம்பம் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 2022 சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 6 MLAக்கள் வெற்றி பெற்றனர். சில மாதங்களில் அதில் 5 பேர் பாஜகவுக்கு தாவிய நிலையில், அப்துல் நசிர் மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் சார்பில் MLA-வாக இருந்தார். அந்த ஒரே ஒரு MLA-வும் பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக சொல்லியுள்ளது கூட்டணிக்குள் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் க்ஷேத்ரிமயும் பிரேன் சிங் அறிவித்துள்ளார். மேலும் தங்கள் கட்சியின் MLA கூட்டணியில் இருந்து விலகி, எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவார் என ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த முடிவு ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தேசிய அளவிலும் நிதிஷ் குமாரின் கூட்டணி பாஜகவுக்கு முக்கியமாக இருப்பதால், மணிப்பூரில் நடந்த சம்பவம் பாஜகவினருக்கு குழப்பத்தை கொடுத்தது.
ஆனால் கட்சி தலைமைக்கே தெரியாமல் மாநில தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக உடனடியாக ஆக்ஷன் அடுத்துள்ளார் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார். மாநில தலைவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என திட்டவட்டமாக சொல்லியுள்ளது ஐக்கிய ஜனதா தளம்.
ஆனால் நிதிஷ் குமாருக்கு தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கனவே பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இடையே புகைச்சல் வந்துள்ளதால், நிதிஷ் இந்தியா கூட்டணி பக்கம் சாயப் போகிறார் என்று பேசப்பட்டது. பீகாரில் அதிக இடங்களை வைத்திருந்தும் நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்ததால் பாஜகவினர் அதிருப்தியில் இருந்தனர். அதனால் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் பதவியை வசமாக்கிவிட கணக்கு போடுகிறது பாஜக. ஆனால் எங்களுக்கு தான் பதவி வேண்டும் என விடாப்பிடியாக இருக்கிறார் நிதிஷ் குமார். அதற்கு ஒத்துவரவில்லை என்றால் கூட்டணியை மாற்றத் தயாராக இருப்பதாகவும் சொல்கின்றனர்.
இதற்கான வார்னிங்காக தான் மணிப்பூரில் கூட்டணியை வாபஸ் வாங்கும் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயமே எங்களுக்கு தெரியாது என சொல்லி மாநில தலைவரை பதவியில் இருந்து நீக்குவதெல்லாம் நிதிஷ் குமாரின் ப்ளான் என சொல்கின்றனர். ஐக்கிய ஜனதா தளம் அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்து வருவதால் பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.