
ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்
காளியம்மாளை சீமான் தொடர்ந்து ஓரங்கட்டி வருவதால் அப்செட்டில் இருக்கும் காளியம்மாள் கட்சி நிகழ்ச்சிகளில் கூட தலைகாட்டுவதை நிறுத்திவிட்டார். இதுசரிபட்டு வராது என விஜய் பக்கம் சாய்வதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண் ஆளுமைகளுள் ஒருவர் காளியம்மாள். அவர் மேடைகளில் பேசினாலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் தேர்தல் பிரச்சாரங்களாக இருந்தாலும் தனக்கென ஒரு தனிப்பாணியை கொண்டிருப்பவர். ஆனால் காளியம்மாளை சீமான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், சில மாதங்களாக அவரை ஓரங்கட்டி வைப்பதாகவும் விமர்சனம் வலம் வருகிறது.
கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் ஒதுங்கியே இருக்கிறார் காளியம்மாள். கடந்த நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய காளியம்மாள், சீமான் பிரபாகரனை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார் என சொன்னார். பிரபாகரனை அவர் சந்தித்தது சில நிமிடங்கள் மட்டுமே என்றும், பிரபாகரன் இவரிடம் ஏதும் பெரியதாக ஆலோசிக்கவில்லை என்றும் சில அரசியல் தலைவர்கள் சீமானை விமர்சிப்பது உண்டு. காளியம்மாளும் இதை சொன்னதும் கடுப்பான சீமான் மேடையிலேயே வைத்து “எல்லாரும் 8 நிமிடங்கள் என சொல்வார்கள், காளியம்மாள் 10 நிமிடங்கள்” என சொல்லியிருக்கிறார் என அதிருப்தியை காட்டும் வகையில் பேசினார்.
அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் காளியம்மாள் மாதிரியான முக்கிய முகங்கள் பிரச்சாரத்திற்கு ஏன் வரவில்லை என கேட்டதற்கு, மீடியாவில் தான் அவங்க முக்கியமான முகம், ஆனால் களத்தில் அவரை விட கட்சிக்காக சிறப்பாக செயல்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என சொல்லி ட்விஸ்ட் கொடுத்தார்.
காளியம்மாள் நாம் தமிழரில் இருந்து படிப்படியாக ஒதுங்கி வருவதை கட்சியினரின் பேச்சுகளே காட்டுகின்றன. காளியம்மாளை திமுக, அதிமுக பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்தன. ஆனால் இத்தனை நாட்களாக எதிர்ப்பு மன நிலையில் இருந்துவிட்டு அவர்களுடன் இணைந்தால் சரிவராது என்ற முடிவுக்கு காளியம்மாள் வந்ததாக சொல்கின்றனர். சரியான நேரத்தில் விஜய்யின் அரசியல் எண்ட்ரியும் நடந்ததால், காளியம்மாள் கவனம் தவெக பக்கம் திரும்பியுள்ளது. விஜய் தரப்பில் இருந்தும் காளியம்மாளை தவெக பக்கம் கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியை விட்டு சென்றால் அது கட்சிக்கும் இழப்பாகவே இருக்கும் என்பதே கட்சியினரின் வருத்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் முக்கிய நபர்கள் அடுத்தடுத்து விலகி வருவதால் கட்சியும் முகமாக களத்தில் யார் இருப்பார்கள் என்ற கேள்வியும் நாம் தமிழருக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர்.