
Trump Request Elon Musk | ”சுனிதாவை காப்பாத்துங்க..”உதவி கேட்ட ட்ரம்ப் உடனே இறங்கிய எலான் மஸ்க் | Sunita Williams
விண்வெளியில் 7 மாதங்களாக சிக்கியுள்ள, சுனிதா வில்லியம்ஸ் நடப்பது என்றால் என்ன என்பதையே நினைவில் வைத்திருக்க முயற்சிப்பதாக, தெரிவித்துள்ள கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுனிதா வில்லியம்ஸை மீட்க உதவ வேண்டும் என எலான் மஸ்கிற்கு அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார். அதாவது ஜுன் மாதம் 6ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் கேப்சூலில் விண்வெளிக்கு சென்றார். தொடர்ந்து அந்த மாதம் 14ம் தேதியே பூமிக்கு திரும்ப வேண்டியிருந்தது. ஆனால், கேப்சூலில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு போன்ற யாரும் எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக,பூமிக்கு திரும்ப முடியாமல் 7 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கி இருக்கிறார். அவர் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது கூட இன்னும் உறுதியாக யாராலும் கூற முடியவில்லை.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக மாணவர்களுடன் கலந்துரையாடிய சுனிதா வில்லியம்ஸ், நான் நீண்ட காலமாக விண்வெளியில் இருக்கிறேன். இப்போது நடப்பது எப்படி இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். நான் நடக்கவில்லை. நான் உட்காரவில்லை. நான் படுக்கவில்லை. நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் இங்கு கண்களை மூடிக்கொண்டு நீங்கள் இங்கே இருக்கும் இடத்தில் மிதக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். திட்டமிடப்பட்ட காலத்தை காட்டிலும் நீண்ட நாட்களாக விண்வெளியில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், கீழே உட்காராமலும் படுத்துக் கொள்ளாமலும் இருந்துள்ளார். இப்போது, திடமான தரையில் நடப்பது போன்ற உணர்வுடன் மீண்டும் முயற்ச்சி செய்வதற்கு சிரமப்படுகிறேன் என்று கூறிய தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நானும் சக நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் இவ்வளவு காலம் விண்வெளியில் தங்கியிருப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. இது அதிர்ச்சி தர கூடியது ஒன்று என்றும் கூறினார்.
இந்நிலையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விண்வெளியில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக பூமிக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவி கேட்டுள்ளார். இப்பணி விரைவில் முடிவடையும். அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதற்கு பைடன் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் மார்ச் மாதம் முடிவில் மீண்டும் பூமிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரையும் வீட்டிற்கு அழைத்து வரும் விண்கலம் மார்ச் மாத இறுதிக்கு முன்பு வரை தயாராக வாய்ப்பில்லை என நாசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.