
Amit shah on Annamalai: தேசிய அரசியலில் அண்ணாஅமலை! பாஜகவில் முக்கிய பதவி! பாராட்டி தள்ளிய அமித்ஷா
தலைவர் பதவியில் இருந்து இறங்கிய அண்ணாமலை தேசிய அரசியலில் எண்ட்ரி கொடுக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமித்ஷாவிடம் இருந்தே வந்திருக்கிறது. அவருக்கு என்ன பதவி கிடைக்கப் போகிறது என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியை சாத்தியப்படுத்துவதற்காக அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து இறக்கியுள்ளது டெல்லி தலைமை. அண்ணாமலையை மீண்டும் பாஜக தலைவராக்க கூடாது என்ற கண்டிஷனுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தையையே ஆரம்பித்தார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். அதனால் அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கும் நயினார் நாகேந்திரனை தலைவராக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில், அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கினால் மட்டுமே கூட்டணியை அறிவிக்கலாம் என இபிஎஸ் கண்டிஷன் போட்டதால் காலை முதலே அமித்ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பு தள்ளிபோனது. இந்தநிலையில் விருப்ப மனுவை தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். இதன்பிறகே இபிஎஸ்-ம் கூட்டணி கதவுகளை திறந்து இறங்கி வந்துள்ளார்.
இந்தநிலையில் அமித்ஷாவிடம் இருந்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அவரது எக்ஸ் பதிவில், ‘பாஜக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே விருப்ப மனு வந்துள்ளது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலையின் பணிகள் பாராட்டுக்குரியது. பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் சேர்ப்பதாக இருந்தாலும் சரி, அரசின் கொள்கைகளை கிராமம் கிராமமாக எடுத்து செல்வதாக இருந்தாலும் சரி அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது. தேசிய அளவில் கட்சிப் பணிகளில் அண்ணாமலையின் திறமைகளை பாஜக பயன்படுத்தும்” என கூறியுள்ளார்.
இதன்மூலம் தேசிய அரசியலில் அண்ணாமலையின் எண்ட்ரி உறுதியாகியிருக்கிறது. அவருக்கு அமைச்சரவையில் பதவி கிடைக்குமா என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. ஆனால் தேசிய அளவில் கட்சியில் அவருக்கு பதவி கொடுக்க தலைமை முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக வளர்ந்துள்ளதால் அவருக்கு தேசிய அளவில் அவரது பங்களிப்பு வேண்டும் என்று பதவி கொடுக்க கட்சித் தலைமை கணக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.