யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”
கர்நாடாகாவிலுள்ள யானைகள் காப்பகத்தில் யானைகளுக்கிடையிலான சண்டையில் மனைவியைப் பறிகொடுத்த கணவன், மனைவியின் கண்களை தானம் செய்திருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
கோடை விடுமுறையை ஒட்டி கர்நாடகா மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே யானைகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஜோயல் - ஜுனேஷ் என்ற தம்பதி தங்களது குழந்தையுடன் அங்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.
நேற்று அங்கு யானைகள் நீரில் குளிப்பதை சுற்றுலா பயணிகளுடன் நின்று இவர்களும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இரு யானைகள் திடீரென ஆக்ரோஷமாக சண்டையிட்டதில் ஜுனேஷ் யானைகளுக்கு நடுவே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் ஜோயல் குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறு கையால் மனைவியைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை.
இந்தச் சம்பவத்தின் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
அதேவேளையில், "என் மனைவியைக் காப்பற்ற யாருமே வாரவில்லை. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட வரவில்லை. வனத்துறையின் அலட்சியமே மரணத்துக்கு காரணம்" என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் கணவர், உயிரிழந்த தன் மனைவியின் கண்களை தானம் செய்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
இதுகுறித்து அவர், "உடல் நசுங்கியதால் என் மனைவியின் மற்ற உறுப்புகளை தானம் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அதனால் கண்களை தானம் செய்தோம். இப்போது, குறைந்தபட்சம் அவரின் கண்கள் வேறொருவர் மூலம் இந்த உலகத்தை தொடர்ந்து பார்க்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.