Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள்முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் கடந்த 3 நாள்களில் மட்டும் 42 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை மார்ச் 15-ம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று மாலை முதலே 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

அதன்படி, வேட்பாளர்கள் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே செலவு செய்ய அனுமதி, வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள், பணம், மதுபானம் போன்றவை வழங்கினால் நடவடிக்கை, உரிய ஆவணங்களின்றி 50,000 ரூபாய்க்கு ரொக்கமாகப் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் என பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு போன்றவை தீவிர பணியில் இறங்கியிருக்கின்றன.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மூன்றே நாளில் சுமார் 42 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "2.37 கோடி ரூபாய் ரொக்கம்,
2.88 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள்,
16.42 கோடி ரூபாய் மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள்,
20.80 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருள்கள் மற்றும் 18 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் என மொத்தமாக 42.65 கோடி ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்ட விரோத பணப் புழக்கம், வாக்காளர்களைக் கவர வழங்படும் இலவச பொருள்கள், மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருள்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola