Viral Video: முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காத மகள்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை:
பெற்றெடுத்த 3 மகள்களை படிக்க வைக்கவும், வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு உயர்த்தவும் தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த முதியவர் ஹரியானாவில் சோனிபட் எனும் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்துள்ளார். ஆனால், அவரது இறுதிச்சடங்கில் ஒரு மகள் கூட பங்கேற்கவில்லை. மாறாக மூன்று மகள்களும் முறையே நேபாளம், உத்தரபிரதேசம் மற்று மும்பை ஆகிய பகுதிகளிலிருந்து வீடியோ கால் வாயிலாக இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பெற்றோர்களுக்கு பிள்ளைகள் ஆற்ற வேண்டிய கடமைகள் தொடர்பான விவாதங்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.
யார் இந்த முதியவர்?
மும்பையை சேர்ந்த ஜவுளி வியாபாரியான சிவசரன் ராம் ரதன் குப்தா, சோனிபட்டின் மேற்கு ராம் நகரில் உள்ள சமஜ் கல்யான் சிக்ஷா சமிதி எனும் முதியோர் இல்லத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். அதே இடத்தில் அவருடன் வசித்து வந்த மனைவி மீனா ஏற்கனவே வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். நீண்ட கால உடல்நல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு இருந்த குப்தா, கடந்த செவ்வாயன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது மகள்கள் மூன்று பேருக்கும் முதியோர் இல்ல நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனாலும், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை என மூன்று மகள்களும் தெரிவித்துள்ளனர். முதியோர் இல்ல நிர்வாகிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து குப்தாவின் இறுதிச்சடங்கை மேற்கொண்டுள்ளனர். அதோடு, வீடியோ கால் வாயிலாக 3 மகள்களும் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனர்.
வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்
இதுதொடர்பாக பேசிய முதியோர் இல்ல நிர்வாகி, “குப்தாவின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து, சுமார் 20 நாட்களுக்கு முன்பே மகள்களுக்குத் தெரிவித்தோம். ஆனாலும் தந்தையை அவரைப் பார்க்க வரவில்லை. அவரிடமிருந்த தொலைபேசி மூலம் தன் மகள்களுடன் பேசி வந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத பிறகு, அவர்களது அழைப்புகள் நின்றுவிட்டன. குப்தா இறந்த பிறகு, நிர்வாகம் தரப்பில் மகள்களை தொடர்புகொண்டு, சோனிபட்டுக்கு வந்தால் ஏற்பாடுகள் செய்து தருவதாகக் கூறினோம். ஆனால், பயணம் செய்ய தங்களுக்கு நேரமில்லை என்று அவர்கள் கூறினர். பின்னர் மகள்கள் காணொளிக் காட்சி மூலம் இறுதிச்சடங்கில் இணைந்து, தங்கள் தந்தையின் இறுதிச் சடங்குகளைத் தொலைவிலிருந்து பார்த்தனர். நேபாளத்தில் ஆசிரியையாகப் பணிபுரியும் அனிதா, தனது தந்தையின் இறுதிச் சடங்குகள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று கோரி, ஆன்லைனில் ரூ. 5,100 அனுப்பினார். தகனச் சடங்கிற்குப் பிறகு, மகள்கள் முதியோர் இல்லத்திடம் இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் காணொளிகளைத் தங்களுக்கு அனுப்புமாறு கேட்டனர்” என தெரிவித்தார். வீடியோ காலில் பங்கேற்ற ஒரு மகள், ”இது இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டும்" என்று கூறுவது தொடர்பான காட்சிகள் இணையதில் வைரலாகியுள்ளன.
கண்களை தானமாக வழங்கிய குப்தா..
குப்தாவின் மூத்த மகள் அனிதா நேபாளத்திலும், நிஷா உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆசம்கரிலும், இளைய மகளான பிரியா மும்பையிலும் வசிக்கின்றனர். மூவருக்கும் திருமணமாகி, சொந்தக் குடும்பங்கள் உள்ளன. ஆரம்பத்தில் தந்தையின் அஸ்தியை பாதுகாப்பாக வைத்திருக்க கூறிய மகள்கள், பின்னர் சோனிபட்டுக்கு வர தங்களுக்கு நேரமில்லை என கூறி, முதியோர் இல்ல நிர்வாகிகளையே அஸ்தியை கங்கையில் கரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம், குப்தாவின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்க, அவரது மரணத்திற்குப் பிறகு கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.
