இறைவனை நேசிப்பவர்களும், இயற்கையை நேசிப்பவர்களும் ஒருசேர விரும்பி செல்லும் பகுதியாக வெள்ளியங்கிரி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மேகங்கள் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதன் காரணமாக இந்த மலை வெள்ளியங்கிரி என்ற பெயர் பெற்றுள்ளது. இதற்கு தென்கைலாயம் என்ற பெயரும் உண்டு. வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுந்த சுயம்புலிங்கம் எனக் கூறப்படுகிறது.


பூண்டி மலையடிவாரத்தில் இருந்து சுயம்பு லிங்கத்தை தரிசிக்க ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் மலைப்பாதையில் மலையேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆண்டு முழுவதும் மலையேறும் பக்தர்களும் உண்டு. குறிப்பாக மகா சிவராத்திரி முதல் சித்ரா பெளர்ணமி வரை அதிக அளவிலான பக்தர்கள் மலையேறி சுயம்பு லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.


ஏழு மலைகளின் சிறப்புகள்


மலையேற்றம் செய்யும் போது, ஏழு ஏற்ற இறக்கங்கள் இருப்பதனால், மலையேற்றம் செய்பவருக்கு ஏழு மலைகள் ஏறியதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் இந்த மலையை ஏழுமலை என்கிறார்கள். முதல் மலை செங்குத்தான பாதை கொண்டிருப்பதால், படிக்கட்டுகளில் ஏறுவதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும். முதல் மலையைத் தாண்டும்போது வெள்ளை விநாயகர் கோயில் அமைந்திருக்கும். இரண்டாவது மலைகளில் உள்ள படிக்கட்டுகளில் ஏறி செல்லும்போது, வழுக்குப் பாறை வந்தவுடன் இரண்டாவது மலை முடிந்துவிடும்.




மூன்றாவது மலையில் கைதட்டிச் சுனை அமைந்துள்ளது. இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வரும் என்பது ஒரு நம்பிக்கை. நான்காவது மலை சமதளத்தில் மண் மலையாக இருப்பதால் நடந்து செல்ல எளிதாக இருக்கும். இங்கு ஒருபுறம் அடர்ந்த வனமாகவும், மறுபுறம் பாதாளமாகவும் அமைந்திருக்கும். இந்த நான்காம் மலையில் ஒட்டர் என்கிற சித்தர் சமாதி அமைந்துள்ளது. ஐந்தாம் மலைக்கு ‘பீமன் களியுருண்டை மலை’ என்ற பெயர் உண்டு.


பஞ்ச பாண்டவர்கள் வெள்ளியங்கிரிக்கு வந்ததால் பீமன் களியுருண்டை மலை, அர்ச்சுனன் தவம் செய்த இடமாகக் கருதப்படும் ‘அர்ச்சுனன் தலைப் பாறை’ போன்ற இடங்கள் இங்கு உண்டு. இந்த மலை ஏற்ற இறக்கம் நிரம்பியதாக இருக்கும். ஆறாவது மலை, கீழ் நோக்கி இறங்கக்கூடியது. இங்குள்ள ஆண்டு சுனையில் பக்தர்கள் குளித்து செல்வது வழக்கம். இந்த மலையில் வெள்ளை மணல் இருப்பதால், ’திருநீறுமலை’ என அழைக்கப்படுகிறது. ஏழாவது மலையான கிரி மலை ஏறுவதற்கு சிரமமும், சவாலும் கொண்டது.


ஆறு மற்றும் ஏழாவது மலைகளில் இரவு நேரங்களில் உடலை உறையச் செய்யும் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருக்கும்.




அதிகரிக்கும் உயிரிழப்புகள்






10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே மலையேற அனுமதிகப்பட்டு வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு மலையேற அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மலையேற்றம் செய்ய வருவது அதிகரித்துள்ளது.


இதற்கு காரணம் சமூக வலைதளங்கள்தான். சமூக வலைதளங்களில் பகிரப்படும் வெள்ளியங்கிரி மலையின் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்து சாகச பயணமாக கருதி பலர் மலையேற வருவதும் அதிகரித்துள்ளது. அதேசமயம் வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் உள்ள சவால்களையும், சிரமங்களையும் அறியாமல் பலர் மலையேற வருவதும், உடல் நலப்பிரச்சனைகள் உள்ளவர்கள் மலையேறுவதாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


வனத்துறையினர் அறிவுறுத்தல்


வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்த பின் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கு கடும் சவாலாக உள்ளது.


இதனால் இருதய நோய் சம்மந்தப்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல் உள்ளவர்கள், உடல்பருமனாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், முதியோர்கள், உடல் நலப்பிரச்சனைகள் உள்ளவர்கள்,கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் மலையேற வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 


வெள்ளியங்கிரி மலை ஏறுவது அவ்வளவு எளிதல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முன் தயாரிப்புகளும், முன்னேற்பாடுகளும் இல்லாமல் வெள்ளியங்கிரி மலையேறுவது பாதுகாப்பானது அல்ல என்பதால், ஆசைக்காக ஏறி உயிரை பணயம் வைத்துவிடக் கூடாது என்பதை பக்தர்கள் உணர வேண்டும்.