கோடை விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற வழக்கமான சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. அதற்கு மாற்றாக அடர் வனத்திற்குள் அமைதியான, இனிமையான பயணம் குடும்பத்துடன் செல்ல விரும்புகிறீர்களா? பரம்பிக்குளம் சுற்றுலா அதற்கு ஏற்ற இடமாக இருக்கும். அங்கு எப்படி செல்வது?, என்னென்ன பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.


பரம்பிக்குளம் செல்வது எப்படி?


மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள பரம்பிக்குளம் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திற்குள் உள்ளது. ஆனால் கேரள மாநிலத்தில் இருந்து இப்பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லை. அதனால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி - ஆனைமலை வழியாக டாப்சிலிப் கடந்து தான் இப்பகுதிக்கு செல்ல முடியும். பரம்பிக்குளம் சுற்றுவட்டார வனப்பகுதியில் 6 செட்டில்மெண்டுகளில் காடர், மலைமலசர், மலசர், முதுவர் ஆகிய 4 வகையான பழங்குடிகள் வசித்து வருகின்றனர்.  அப்பழங்குடிகளே சுற்றுலா வழிகாட்டியாகவும் செயல்படுகின்றனர். சேத்துமடை தாண்டி இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை என்பதால், நான்கு சக்கர வாகனம் அல்லது பேருந்தில் தான் செல்ல முடியும்.




தமிழ்நாடு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதியிலும் சுற்றுலா செல்லலாம். காடுகளுக்குள் சவாரி, யானை சவாரி, தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு நேரம் செலவழிக்க விரும்பவில்லை என்றால், நேரடியாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு சென்று விடலாம். வனத்துறை சோதனைச் சாவடியில் ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். வாகனத்திற்கு 80 ரூபாய் வசூலிக்கப்படும். டிக்கெட் வாங்கிக் கொண்டு 2 கி.மீ. தூரம் சென்றால் யானைப்பாடி என்ற இடம் வரும். அங்கு சவாரி மற்றும் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் செலுத்த வேண்டும். 


பரம்பிக்குளம் அணை




பரம்பிக்குளம் சுற்றுலாவிற்கு மட்டுமல்ல, தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இடமாகவும் உள்ளது. பிஏபி எனப்படும் பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்தின் உயிர் நாடியான பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 3 அணைகள் இப்பகுதியில் உள்ளன. இந்த அணைகள் தான் மேற்கு மண்டல விவசாயிகளின் வாழ்வாதரமாக இருந்து வருகிறது. காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைகள், கேரள மாநிலத்திற்குள் இருந்தாலும் தமிழ்நாடு அரசே பராமரித்து வருகிறது. பிஏபி திட்ட அணைகளில் அதிக கொள்ளளவு கொண்ட அணை, பரம்பிக்குளம் அணை. இது தமிழ்நாடு அரசு கட்டிய மூன்றாவது பெரிய அணையாகும். வால்பாறை அருகேயுள்ள சோலையாறு அணையில் தேங்கும் நீர் பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து விவசாய பயன்பாட்டிற்கு உதவுகிறது.


காடுகளுக்குள் சவாரி


யானைப்பாடியில் இருந்து காட்டிற்குள் வனத்துறை வாகனத்தில் சவாரி செல்வதற்கு ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வனத்துறை வாகனத்தில் 3 மணி நேரத்தில் மொத்தம் 54 கி.மீ. தூரம் காடுகளுக்குள் பயணம். 5 இடங்களுக்கு தான் அழைத்துச் செல்கின்றனர். என்றாலும் வழியெங்கும் கூட்டம் கூட்டமாக மான்களும், காட்டு மாடுகளும் காட்சி தரும். அவ்வப்போது யானைகளை சந்திக்க முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளும் பார்க்க வாய்ப்புள்ள வனப்பகுதி அற்புதமான அனுபவங்களை தரக்கூடியது.




வனத்துறை வாகனம் ஆட்களை ஏற்றிக் கொண்டு மூங்கில்களும், தேக்கு மரங்களும் நிறைந்த வனச்சாலையில் பயணித்து, தூணக்கடவு அணை முன்பாக நின்றது. மலையடிவாரத்தில் நிறைந்து கிடக்கும் அணை முன்பாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதில் சுவராஜ்ஜியமாக விஷயம் என்னவெனில், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் இரண்டு அணைகளும் இரட்டை அணைகள். ஒரு அணையில் நீர் அதிகரித்தால், மற்றொரு அணையிலும் அதே அளவு நீர் அதிகரிக்கும். நீர் குறைந்தாலும், அதே அளவு மற்றொரு அணையிலும் குறையும். அடுத்து தூணக்கடவு அணை காட்சி முனை பார்த்தபடி சென்றால், பரம்பிக்குளம் வரும். அங்கு உணவகங்கள் உள்ளன. மீன் குழம்பு சுவைக்கவே வரும் பலர் உண்டு.


கன்னிமாரா தேக்கு


அடுத்ததாக தேக்கு காடுகளின் ஊடாக கன்னிமாரா தேக்கை பார்க்க அழைத்துச் செல்கின்றனர். பின்னந்தலை முதுகில் படுமளவிற்கு சாய்த்து பார்த்த போது தான், மரத்தின் கிளைகள் கண்ணில் படும். தண்டு பகுதிகளில் கிளைகள் இல்லாமல் உச்சியில் மட்டும் கிளைகள் விரிந்து, அடர்ந்த இலைகளுடன் ஒரு குடை போல விரிந்திருந்தது. 467 ஆண்டுகள் பழமையான இந்த தேக்கு மரம், உலகத்தில் வாழும் அதிக வயதான தேக்கு மரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த மரத்தை உள்ளூர் பழங்குடிகள் வெட்ட முயன்ற போது, வெட்டப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு வந்ததாம். அதனால் பயந்து போன பழங்குடிகள் இம்மரத்தை வணங்கி வருகின்றார்களாம். பார்க்கவும், அதுப்பற்றி கேட்கவும் கன்னிமாரா தேக்கு ஆச்சரியம் ஏற்படுத்துவதாக இருக்கும்.




இதுமட்டுமின்றி கட்டணத்திற்கு ஏற்ப தங்கும் விடுதிகளும் உள்ளது. அணையை ஒட்டிய பகுதிகளில் மர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மர வீடு, மூங்கில் படகு பயணம், தீவின் நடுவே தங்குமிடம் என புது அனுபவங்களை பரம்பிக்குளம் தரும். பரம்பிக்குளத்தில் டிரெக்கிங், சவாரி மற்றும் உணவு உடன் ஒரு நாள் முழுக்க சுற்றிப் பார்க்க வனத்துறையே தனியாக ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கு ஒரு நபருக்கு 970 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல சுற்றுலா பயணிகளுக்காக வனத்துறையினர் கட்டணத்திற்கு ஏற்ப வசதிகள் மற்றும் தங்குமிடங்களை வழங்கி வருகின்றனர்.


பெருவாரி தீவு


பெருவாரி தீவு என்பது பசுமையான காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட பெருவாரி நீர்த்தேக்கத்தின் உள்ளே உள்ள ஒரு தீவில் ஒரு மரத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தங்கும் இடமாகும். மூங்கில் படகில் அரை மணி நேரம் பயணித்து, இந்த தீவை அடைய வேண்டும். இயற்கையின் அழகை கண்டு இரசிக்க ஒரு அற்புதமான இடமாக உள்ள இப்பகுதியில், வாய்ப்பு இருந்தால் யானைகள் மற்றும் மான்கள் நீர்த்தேக்கத்தில் நீந்துவதை பார்க்க முடியும். மதியம் 12 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை டிரெக்கிங், சவாரி, படகு பயணம் உடன் பெருவாரி தீவிற்கு சென்று தங்கி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நபருக்கு 6900 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.




இரைச்சல், மாசுபாடு கொண்ட நகர வாழ்க்கையில் இருந்து விலகி அமைதியில் இயற்கையை ரசிக்க பரம்பிக்குளம் ஏற்ற இடமாக விளங்கி வருகிறது.