தஞ்சாவூர்: ஆஹா என்ன அழகு எத்தனை அழகு... கண்ணையும், மனதையும் தழுவி நெஞ்சை நிறைக்கும் தஞ்சையில் உள்ள அனைத்தும் அழகோ அழகுதான். நம் முன்னோர்கள் சிறந்த அறிவு ஜீவிகள். முக்கியமாக நீர் மேலாண்மையில் சிறந்தவர்கள். அதனால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தஞ்சையில் குளங்கள் வெட்டினர்


சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்குபுறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழிகள் அமைக்கப்பட்டன. அன்றே தண்ணீரின் அவசியத்தையும், மேன்மையையும் உணர்ந்து பரந்து, விரிந்து சென்றது. இப்படி பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இதுமட்டுமல்ல பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம், அய்யன் குளம், சாமந்தன் குளம் உருவாக்கப்பட்டது. தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார் பாண்டிய மன்னன் வல்லபனுக்கு சேனாதிபதியாய் இருந்த சாமந்தன் என்பவர். தஞ்சை நகரில் சாமந்த நாராயண விண்ணகரம் என்ற பெருமாள் கோயிலை நிறுவினார்.


அந்த கோயிலுக்காக சாமந்த நாராயண குளம்  என்ற குளம் ஒன்றை வெட்டினார். பின்னர், அங்கு ஒரு புதுக்குடியிருப்பையும் தோற்றுவித்தார் சாமந்தன். அப்படி அவர் தோற்றுவித்த குடியிருப்பு மெல்ல மெல்ல வளர்ந்து நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என பயணித்து இன்று தஞ்சை மாநகராய் பிரமாண்டமாய் மாறியுள்ளது. தஞ்சையில் புதுக் குடியிருப்பு வரக் காரணாமாய் இருந்த இக்கோயில் கீழவாசல் பகுதியில் கீழை நரசிம்மர் என்ற பெயரில் இன்றும் உள்ளது. தஞ்சைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பெரிய கோயிலை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல் வரலாற்றை தேடி பயணிக்க வேண்டும்.




தஞ்சாவூர் மாநகருக்கு தண்ணீர் பிரச்சனையை போக்கும் பல்வேறு குளங்களில் சாமந்தன் குளமும் ஒன்றாகும் எழில் மிகு குளங்களாக இருந்த அய்யன்குளம், சாமந்தான் குளம் ஆகியவை ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைக்கூளங்களால் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு கடந்த காலத்தில் மாறியது. தஞ்சையில் நீர் மேலாண்மையில் முக்கியமாக விளங்கிய இது போன்ற குளங்களா என்று அனைவரும் வியக்கும் அளவில் இருந்தவையின் அவலநிலை தற்போது மாறியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாமந்தான்குளமும், அய்யன்குளம் சீரமைக்கப்பட்டது.


இதில் அய்யன்குளத்துக்கு, மன்னர் காலத்தில் பயன்படுத்திய நீர் வழிப்பாதையை கண்டறிந்து, அவை சீரமைக்கப்பட்டது. குளத்தை சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள், சுவரில் ஓவியங்கள் என பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு மாலைநேரத்தில் பொதுமக்கள் இதில் நடந்து தங்களை ரிலாக்ஸ் ஆக்கி கொள்கின்றனர். மாலை நேரத்தில் சுற்றுலாவாக வருபவர்களுக்கு இந்த குளங்கள் சிறப்பான ஒரு மகிழ்வை தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. குளம் தானே என்று நினைப்பதை தவிர்த்து நம் முன்னோர்களின் தொலைநோக்கு பார்வை எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டும்.


சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாமந்தன் குளமும் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. தஞ்சையின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரை செவப்பன் ஏரிக்கு வாரிகள் மூலம் கொண்டு வந்து, நீரை சேமித்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும் குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் வண்டல் மண்ணை படியவிட்டு தெளிந்த நீரை சுடுமண் குழாய் வழியாக மேலவீதியில் உள்ள அய்யன் குளத்திற்கு கொண்டு சென்று, தொடர்ந்து சென்று சாமந்தன் குளத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.


இத்தகைய பெருமை வாய்ந்த சாமந்தான் குளத்தின்  மேல்புறத்தில்  படிக்கட்டுகளும், குளத்தை சுற்றிலும் அலங்கார மின்விளக்குகள், நடுவில் நீராழி மண்டபம், அதில் பக்தர்கள் சென்று வழிபடும் வகையில் பாலங்கள், பொது மக்கள் குளத்தில் பாதுகாப்பாக நின்று பார்ப்பதற்காக, குளத்தை சுற்றிலும் எவர்சில்வர் குழாய்கள், திருக்குறள், அதன் தலைப்புகள், வேளாண்மை தொடர்பான படங்கள், பழங்காலத்து விவசாய காட்சிகள், பல்வேறு வண்ணங்களில் கண் கவரும் வகையிலும், நவீன வர்ணம் மூலம் ஒவியமாக வரைந்துள்ளனர். இது சுற்றுலாப்பயணிகளுக்கு சிறப்பான ஒரு அனுபவத்தை அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.