கோடை விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் உடன் இணைந்து இயற்கையை இரசித்து, இன்புற பயணம் மேற்கொள்ள திட்டமிடுகிறீர்களா? இதோ உங்களுக்காகவே காத்திருக்கிறது, பரளிக்காடு சூழல் சுற்றுலா தலம். கோவை நகரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் இயற்கையின் எழில் மாறாமல் இருக்கும் மலைக்கிராமம், பரளிக்காடு. பில்லூர் அணைக்கு அருகே அமைந்துள்ள இந்த பகுதி, ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் பவானி ஆற்றில் பரிசல் பயணம், சுவையான உணவு, வனத்திற்குள் நடைபயணம், பவானி ஆற்றில் குளியல் என அட்டகாசமான பயண அனுபவத்தை பரளிக்காடு தரக்கூடும். இதனால் பரளிக்காடு சுற்றுலா தலம் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக இருந்து வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு உகந்த இடமாக உள்ளது.




முன்பதிவு செய்ய


இங்கு செல்ல சுற்றுலா பயணிகள் www.coimbatorewilderness.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யவேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாவிற்கு அனுமதி வழங்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 550 ரூபாயும், 5 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 450 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சொந்த வாகனம் அல்லது பொதப் போக்குவரத்து மூலம் பரளிக்காடு செல்லலாம். பழங்குடியினர் தயாரித்த உணவு வழங்கப்படுவதோடு,  ஆற்றில் பரிசலில் பயணம் செய்து பில்லூர் அணையை கண்டு ரசிக்க முடியும். மாலையில் பவானி ஆற்றில் குளியலோடு சுற்றுலா முடியும்.




பவானி ஆற்றில் பரிசல் பயணம்


நீலகிரியில் உற்பத்தியாகி கேரளாவில் சென்று மீண்டும், தமிழ்நாட்டிற்குள் பாயும் பவானி நதியின் குறுக்கே கட்டப்பட்ட பில்லூர் அணையின் பின்பகுதியில் இக்கிராமம் உள்ளது. ஆறும், ஆற்றங்கரையோர ஆலமரங்களும் அசைந்து கொண்டிருக்க, ஆலமர விழுதுகளிலும், ஊஞ்சலிலும் சிலர் ஆடிக் கொண்டிருப்பர்.


சுற்றிலும் மலைகளும், மரங்களும் சூழ்ந்திருக்க நடுவே ஓடும் ஆறு என இயற்கை ரம்மியமாக காட்சியளிக்கும். பரிசல் பயணம் செய்ய 20 பரிசல்கள் இருக்கும். ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் லைப் ஜாக்கெட் அணிவிக்கப்பட்டு, பரிசலில் ஏற்றப்படுவர்.


பரிசல்களில் உள்ளூர் பழங்குடிகள் துடுப்பைப்போட, பரிசல் ஆற்றில் மிதந்து செல்ல செல்ல, சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க பறவைகளின் ஓயாத சத்தங்களோடு இயற்கை எழிலையும், தூரத்தில் தெரியும் பில்லூர் அணையையும் கண்டு ரசிக்கலாம். பின்னர் காட்டுக்குள் சிறிய நடை பயின்று வர, மதிய உணவு தயாராக இருக்கும்.




சுவையான உணவிற்கு பின்னர் அத்திக்கடவு பாலத்தில் இருந்து ஆற்றங்கரையோரத்தில் நடைபயணம் துவங்கும். சலசலத்து ஓடிக் கொண்டிருக்கும் பவானி நதிக்கரையோரம், பல விதமான பறவைகளின் சத்தங்களும், பூச்சிகளின் ரீங்காரமும் கேட்கும். இருவாச்சி பறவைகளை கண்டு ரசிக்க முடியும். இயற்கையோடு நடந்து ஆற்றில் ஒரு ஆனந்த குளியலோடு பரளிக்காடு பயணம் முடியும்.


பூச்சமரத்தூர் தங்கும் விடுதிகள்




அத்திக்கடவு பாலத்திற்கு முன்பு இடது புறம் செல்லும் சாலையில், பரளிக்காடுவிற்கு நேர் மேலே இருக்கிறது, பூச்சமரத்தூர் தங்கும் விடுதிகள். இது சுற்றுலா பயணிகளுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக வனத்துறையினரிடம் தனியாக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்வது கட்டாயம். இயற்கையான சூழலில் ரம்மியமான தங்கும் இடமிது.


தங்குமிடத்தை சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கும். போட்டோ எடுக்க அங்காங்கே மான், காட்டு மாடு கொம்புகளும், எலும்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும். இயற்கையின் அழகை ரசித்தபடி இரவு பொழுதை கழிக்க முடியும். மொத்ததில் பரளிக்காடு பயணம் இயற்கை கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைக்க இனிமையான பயண அனுபவமாக இருக்கக்கூடும்.