உலக அளவில் வாட்ஸப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்டா நிறுவனம் தங்களது பயனர்களுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு புதிய வசதிகளை அவ்வப்பொழுது வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது வாட்ஸப்பில் அனுப்படும் வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்ஸ் ஆக வைக்கும் வசதியினை டெஸ்ட் செய்து வருகிறது. 


WaBetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்ட்ராய்ட் வர்ஷன்  2.22.21.5 பீட்டா அப்டேட்டின் படி, வாய்ஸ் மெசேஜ்களை வாட்ஸப் ஸ்டேடஸ் ஆக வைக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதற்கான பணிகளில் வாட்ஸப் தொழில்நுட்ப குழுவினர் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும், வாய்ஸ் மெசேஜ் சேவையில் கூடுதல் வசதியை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்டு செய்யும்போது, விண்டோவை விட்டு வெளியே வந்தால், அதை ஆட்டோமேட்டிக்காக் சேமித்து வைப்பது, ஸ்டேடஸில் ப்ளே/ பாஸ் வசதியை கொண்டு வருது உள்ளிட்டவைகளையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 







இந்நிலையில் தான் அடுத்தடுத்து 5 புதிய அப்டேட்களை வழங்க உள்ளதாக, WABetainfo தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.


1. பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் மோட்:


முதலாவதாக பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் எனும் புதிய வசதியை, ஐ-போன் பயனாளர்களுக்கு வாட்ஸ்-அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக, WABetainfo அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஐ-போன் பயனாளர்கள் வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் பேசும்போது, அந்த செயலியை விட்டு வெளியேற முடியாது. வேறு செயலியை பயன்படுத்தவும் முடியாது. ஆனால், புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள  பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் மோட் வசதி, அந்த பிரச்னைக்கு தீர்வாக அமைய உள்ளது. இதன் மூலம், வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் பேசிக்கொண்டே, மற்ற செயலிகளையும் ஐ-போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.


2. புதிய எமோஜிக்கள் அறிமுகம்:


பயனாளர்களின்  சாட் செய்யும் அனுபவத்தை மேம்படுத்த அண்மையில் புதியதாக 8 எமோஜிக்கள் வாட்ஸ்-அப் செயலியில்  அறிமுகப்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து, புதியதாக மேலும் 21 புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும்,  பல்வேறு நாட்டு மக்களின் தோலின் நிறத்திற்கு ஏற்ப அவை வடிவமைக்கப்படுவதாகவும்  WABetainfo தெரிவித்துள்ளது.


3. எளிய சர்ச்சிங் வசதி:


தற்போதைய சூழலில் வாட்ஸ்-அப் செயலியில் ஏதேனும் குறிப்பிட்ட குறுந்தகவல்களை பார்க்க  வேண்டுமென்றால், மொத்தமாக பழைய குறுந்தகவல்கள் முழுவதையும் புரட்டி போட்டு தேடவேண்டி உள்ளது. ஆனால், விரைவில் வர உள்ள புதிய அப்டேட் மூலம், தேதியை பதிவிட்டு தேடினால் குறிப்பிட்ட நாளில் அனுப்பிய குறுந்தகவல்களை எளிதாக பெற முடியும் எனும் வகையில், புதிய அம்சம் வடிவமைக்கப்படுகிறது. 


4. தலைப்புடன் பகிரும் வசதி:


புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF ஃபைல்கள் ஆகியவற்றை பகிரும்போது, விருப்பப்பட்டால் இனி தலைப்புடன் அவற்றை பகிரலாம் எனவும், இது பிற்காலத்தில் தேடும்போது அந்த பணியை எளிமையாக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. டேப்லெட்களில் வாட்ஸ்-அப் செயலி


டேப்லெட்களில் நேரடியாகவே வாட்ஸ்-அப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையிலான, புதிய அப்டேட் விரைவில் வழங்கப்பட உள்ளது. இதுநாள் வரை செல்போன் எண் இருந்தால் மட்டுமே, டேப்லெட்டில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்த முடியும். புதியதாக வர உள்ள அப்டேட் மூலம், டேப்லெட்டில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்த இனி செல்போன் தேவைப்படாது என கூறப்படுகிறது. 


மேலே குறிப்பிட்ட பல புதிய அம்சங்கள் ஏற்கனவே சோதனை முயற்சியில் சில பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு, படிப்படியாக மற்ற பயனாளர்களுக்கு கிடைக்கப்பெற்று வருகிறது. டேப்லெட்களுக்கான வாட்ஸ்-அப் செயலி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.