தகவல் பரிமாற்றத்தில் முக்கிய தொழில்நுட்பமாக மாறியுள்ள, வாட்ஸ்-அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் தனிநபர் தரவுகள் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்தாலும், பொதுமக்களிடையே வாட்ஸ்-அப் செயலியின் செயல்பாடு குறைந்தபாடு இல்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
அடுத்தடுத்து வழங்கப்பட்ட அப்டேட்கள்:
உதாரணமாக, 256 பேர் மட்டுமே ஒரு வாட்ஸ்-அப் குழுவில் சேர முடியும் என்றிருந்த எண்ணிக்கை வரம்பு, 512 ஆக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குறுஞ்செய்திகள் தானாக அழிவது, ஒருமுறை மட்டுமே குறுஞ்செய்தியை பார்க்க அனுமதிப்பது, ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ காலில் பேசும் அம்சமும், அந்த அழைப்புக்கான லிங்கை சக பயனாளர்களுக்கு அனுப்பி, அதனை தொட்டு கான்பிரன்ஸ் வீடியோ காலில் இணையும் வசதி, லேப்டாப்பில் வாட்ஸ்-அப் கணக்கை இணைக்க லிங்க்ட் டிவைஸ் வசதி போன்றவற்றையும் மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது. விரைவில் லேப்டாப்பிலேயே வாட்ஸ்-அப் கணக்கிலிருந்து வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விண்டோஸ் செல்போன்களில் சிலவற்றில் மற்றும் குறிப்பிட்ட புதிய வசதி சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்-அப் செயலியின் புதிய அம்சம்:
இந்நிலையில், பயனர்கள் தங்களது வாட்ஸ்-அப் கணக்கில் இருந்து தங்களுக்கே குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் படிப்படியாக புதிய வசதி கிடைக்கப்பெறுகிறது. இதற்கு பயனாளர்கள் Google Play Store/Apple App Storeக்குச் சென்று வாட்ஸ்-அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
புதிய அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது:
- பயனர்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்
- NEW CHAT பொத்தானைத் தட்டவும் - ஐபோனில் மேல் வலது மூலையில் கிடைக்கும் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் கீழே கிடைக்கும்
- இங்கே, உங்கள் மொபைல் எண்ணுடன் தொடர்பு அட்டையில் ‘Message Yourself’ எனக் காணலாம்.
- தொடர்பைக் கிளிக் செய்து பயனளரகள் தங்களுக்கு தாங்களே குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம்.
புதிய அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு செய்திகளுடன் புகைப்படங்கள், ஆடியோக்கள், வீடியோக்களை அனுப்ப முடியும். தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நேரடியாக ஆவணங்களைப் பகிர முடியும் எனவும், மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.