வாட்சாப் செயலியில் வாய்ஸ் நோட்களை வேகமாக கேட்கும் அம்சத்தைப் போல, ஆடியோ மெசேஜ்களுக்கும் அதே அம்சத்தை அறிமுகப்படுத்தப் பணியாற்றி வருகிறது வாட்சாப் நிறுவனம். தற்போது ஆப்பிள் ஐ ஓ.எஸ்களில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்தப் புதிய அம்சத்தின் மூலம் வாட்சாப் செயலியில் ஆடியோ மெசேஜ்களை 1.5, 2 ஆகிய அளவீடுகளின் மடங்குகளுக்கு வேகமாகக் கேட்க முடியும். இது ஏற்கனவே வாய்ஸ் நோட்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த அம்சம். 


வாட்சாப் செயலில் குரல் மூலமாகப் பதிவு செய்து அனுப்பும் மெசேஜ் வாய்ஸ் நோட் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாய்ஸ் நோட் பிறருக்குப் பகிரப்படும் போதோ அல்லது பிற ஆடியோ ஃபைல்களை அனுப்பும் போதோ, அது ஆடியோ மெசேஜ் என்று அழைக்கப்படுகிறது. ஒரு வாய்ஸ் நோட்டைப் பிறருக்குப் பகிரும் போது, அது இயல்பாகவே வாய்ஸ் நோட்டாக மாறி விடுகிறது.


சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, வாட்சாப் நிறுவனம் வாய்ஸ் நோட்களின் வேகத்தைக் கூட்டும் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதே சிறப்பம்சத்தைத் தற்போது ஆடியோ மெசேஜ்களுக்கு வழங்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பம்சம் ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன் செயலியான ஐ ஓ.எஸ்ஸில் சோதிக்கப்பட்டு வருவதாகவும், முதலில் ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்தபடியாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 



இந்த விவகாரம் தொடர்பான மேலதிகத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் ஏற்கனவே வாய்ஸ் நோட் அம்சத்தில் இந்த வேகத்தைக் கூட்டும் அம்சம் இருப்பதால், இது விரைவில் பரிசோதிக்கப்பட்டு, பயனாளர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வாட்சாப் செயலியின் புதிய சிறப்பம்சங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, வாட்சாப் நிறுவனத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பேச வேண்டும். Flash call சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வாட்சாப் செயலியில் புதிதாக கணக்கு தொடங்கும் போது, எஸ்.எம்.எஸ் மூலமாக அல்லாமல், ஃபோன் செய்து சரிபார்க்கும் பாதுகாப்பு வசதியாக இந்தச் சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது ஆண்ட்ராய்ட் செயலியில் இயங்கும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 



மற்றொரு சிறப்பம்சமாக, ஒரு உரையாடலில் குறிப்பிட்ட ஒரு மெசேஜை மட்டும் குறித்து வைப்பதற்கும், அதனை ரிப்போர்ட் செய்வதற்குமான வசதியை வாட்சாப் நிறூவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்சாப் நிறுவனம் ஏற்கனவே பயனாளர்களுக்குப் பிற பயனாளர்களின் சுய விவரத் தகவலின் அடிப்படையில் ரிப்போர்ட் செய்வதற்கும், ப்ளாக் செய்வதற்கும் வசதி அளித்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் குறிப்பிட்ட மெசேஜ் அடிப்படையிலான ரிப்போர்ட் என்பது இந்த நடைமுறையை வேகமாகவும், எளிதாகவும் நடத்த உதவும் என வாட்சாப் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


இந்த இரு சிறப்பம்சங்களையும் வாட்சாப் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.