உலக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. விண்வெளியில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சிகப்பு மற்றும் ஊதா நிறங்களில் கண்களை கவரும் அட்டகாசமான பிரதிபலிப்பாக இருக்கிறது. பார்ப்பதற்கு கடலை நினைவுப்படுத்துவதாக இருப்பதால் இதற்கு  Cosmic Reef அதாவது விண்வெளியில் உள்ள கடல் பாறை என பெயர் வைத்திருக்கிறது நாசா. நீருக்கு அடியில் எப்படி வண்ண வண்ண கற்கள் , பாறைகள் போன்றவை காணப்படுமோ அதே போல தோற்றமளிப்பதால்தான் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல நட்சத்திரங்கள் இணைந்து உருவான மாகெல்லானிக் கிளவுட் என குறிப்பிட்ட நாசா இதனை பால்வீதியின் செயற்கைகோள் விண்மீன் என தெரிவிக்கிறது. இது விண்வெளியிலிருந்து 160,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.







இதில் ஆரஞ்சு நிறத்தில் உள்ள நெபுலா கடந்த 2014 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது . இதனை NGC 2014 என அழைக்கின்றனர். இதில் பிரகாசிக்கும் மையப்பகுதி கனமான நட்சத்திரங்களின் தொகுப்பு என குறிப்பிட்ட நாசா , ஒவ்வொன்றும் சூரியனைவிட 10 முதல் 20 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளது.அதே போல ஊதா நிறத்தில் உள்ள நெபுலா கடந்த ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை NGC 2020 என அழைக்கின்றனர்.இது ஒரு தனி மாமத் நட்சத்திரத்தால் உருவாக்கப்பட்டது மேலும் சூரியனை விட 200,000 மடங்கு ஒளிரும் தன்மை கொண்டது என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். இந்த புகைப்படங்களை பகிந்த நாசா , Cosmic Reef விண்வெளியின் அழகையும் மர்மத்தையும் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளது.30ஆண்டுகளுக்கும் மேலான சேவையை கொண்டாடும் வகையில் , நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.






 அதே போல காஸ்மிக் கோட்டை என்ற மற்றொரு புகைப்படத்தையும் ஹப்பிள் புகைப்படம் எடுத்துள்ளது.மூன்று-ஒளி ஆண்டு உயரமான இந்த சிகரம் 2010 இல் எடுக்கப்பட்டது. தூசி மற்றும் வாயுவால் ஆனது இந்த கோட்டை. நெபுலாவின் இந்த கொந்தளிப்பான பகுதி தீவிர நட்சத்திரத்தை உருவாக்கும் செயல்பாட்டின் அறிகுறிகளைக் காட்டுகிறது என்கிறது நாசா. மில்லியன் கணக்கான கண்கவர் படங்களுடன் உலகின் கற்பனையைப் படம்பிடித்த பெருமை நாசா ஹப்பிளையே சேரும். யாரும் அறியாத பல அதிசயங்களை புகைப்படம் எடுத்து, பூமிக்கு அனுப்பும் நாசா ஹப்பிள் ‘விண்வெளியின் கண்’ என்றாலும் மிகையில்லை.