Pink Whatsapp: நம்ம ஊரில்தான் உலகில் உள்ள அனைத்து விதமான போலி செயலிகளைப் பயன்படுத்தி, தங்களது சொந்த தகவல்களுடன் பணத்தை இழப்பவர்கள் அதிகம். அதுவும் விதவிதமான பொய்களை நம்பி ஏமாறும் மக்கள் நமது ஊரில்தான் அதிகம் இருப்பார்கள் போல. எப்படியும் வாரத்திற்கு ஒரு புகாராவது  காவல் நிலையத்தினை வந்தடைந்து விடுகிறது. 


முதலெல்லாம், அதிகப்படியான லாபத்திற்கு ஆசைப்பட்டு ஒரு மோசடிக்காரர்களிடம் பணத்தை இழந்தவர்கள் அதிகம். ஆனால் இன்றைக்கு இணைய வழியில் பணப்பரிவர்தனை வந்த பின்னர், பொது மக்கள் தங்களை அப்டேட் செய்துகொண்டதைப் போல், மோசடிக்காரர்களும் அப்டேட் செய்துகொண்டார்கள். அதன் விளைவு தான் இது மாதிரியான போலி செயலிகள். 


என்னதான் காவல்துறையின் கடைநிலை காவல்காரர் முதல் உயர்பொறுப்பு காவலர் வரை அனைவரும் பலமுறை மக்களை எச்சரித்தாலும் யாரும் அதனை அப்போதைக்கு மட்டும் கேட்டுக்கொண்டு அதன் பின்னர் அவற்றை, மறந்து விடுகின்றனர். அதன் விளைவுதான் காவல் நிலையத்தில் குவியும் புகார்களுக்கு முக்கிய காரணம்.


ஏற்கனவே எவ்வளவோ எச்சரித்தும் பலர் ஜி.பி. வாட்ஸ்-ஆப் என்ற செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மக்களிடத்தில் அதிகமாக, பயன்பாட்டிற்கு வந்துள்ள செயலி ”பிங்க் வாட்ஸ்-ஆப்”. இது கூகுள் ப்ளேஸ்டோரில் இல்லை என்றாலும் மக்கள் இதனை கூகுள் சர்ர்சில் தேடி, apk வடிவத்தில் அந்த லிங்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். 


இது போன்ற செயலிகள் மூலம் தனது காண்டேக்ட் லிஸ்ட்டில் உள்ளவர்கள் யாரேனும் தங்களை ப்ளாக் செய்திருந்தால் கூட அவர்களது வாட்ஸ்-ஆப் நடவடிக்கைகளை கவனிக்க முடியும் என்பதால், பலர் இது போன்ற வாட்ஸ்-ஆப்களை பயன்படுத்துகின்றனர். 


ஆனால் இது போன்ற செயலிகள் மொபைலை முற்றிலும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விடும், இதனால் மொபைலில் பணபரிவர்த்தனை செய்யும்போது அதன் மூலம் தகவல்கள் திருடப்பட்டு பயனர்களின் பணம் திருடப்படலாம். அதேபோல், தற்போது வாட்ஸ்-ஆப்பிலே பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்பதால், இதன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போதும் பணம் திருடப்படலாம். 


ஏற்கனவே பல்வேறு புகார்களின் அடிப்படையில், போலியான செயலிகளை கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், தற்போது மக்கள் இவ்வகையான போலி செயலிகளை டவுன்லோடு செய்து பயன்படுத்துவதால், பயனர்களின் தகவல்களும் திருடப்படுகிறது. 


பணம் மற்றும் தகவல்கள் திருடப்பட்ட பின்னர் காவல் துறையை நாடாமல், அதற்கு முன்னரே விழிப்புடன் இருப்பது சாலச்சிறந்தது.