UPI Payment: யுபிஐ சேவைகளில் பயன்படுத்தப்படும் பல புதிய சேவைகளை  அறிமுகம் செய்து வைத்தார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.


டெல்லியில் நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் (Global Fintech) விழாவில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய பேமெண்ட் கழகத்தின் (National Payments Corporation of India) புதிய தயாரிப்புகளை சக்திகாந்த தாஸ் அறிமுகம் செய்து வைத்தார். யுபிஐ சேவைகளில் பயன்படுத்தப்படும் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வைத்தார்.  அதாவது, ஹலோ யுபிஐ,  யுபிஐ லைட் எக்ஸ், Near Field Communication, யுபிஐயில் லோன் எடுப்பது போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   


ஹலோ யுபிஐ (Hello UPI):


ஹலோ யுபிஐ என்ற ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் குரல் வழியாக பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் மூலமே யுபிஐ செயலிகளை பயன்படுத்த முடியும். இதனை ஆப்ஸ், டெலிகாம் அழைப்புகள் மற்றும் IoT சாதனங்கள் மூலம் குரல் வழியாக பணம் செலுத்த பயனர்கள் இந்த ஹலோ வசதி உதவுகிறது. இது விரைவில் பல பிராந்திய மொழிகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 


லைட் எக்ஸ் (Lite X): 


யுபிஐயில் லைட் எக்ஸ் (Lite X) என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் இணைய வசதி இல்லாமல் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவசதி சீராக இருக்கும் பகுதிகளில்  இநத் லைட் எக்ஸ் வசதியை பயனர்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது Near Field Communication (NFC) என்ற தொழில்நுட்பம் மூலம் ஆப்லைனில் பணப் பரிவர்த்தனை செய்ய உதவுகிறது. 


கடன் பெறும் வசதி:


யுபிஐ வசதியில் ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, யுபிஐ செயலி மூலம் லோன் எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கடன் வாங்கும் வசதியை யுபிஐ செயலிகளுக்கு வழங்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.


யுபிஐ பரிவர்த்தனை:


பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய வசதிதான் UPI (Unified Payments Interface). கடந்த 2016-ஆம் ஆண்டு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையைத் தொடங்கியது. தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகள் மூலம், டீக்கடை தொடங்கி நகைக்கடை வரையிலும் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றிற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. 


 டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்த யுபிஐ வசதி மூலம் கடந்த மாதம் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10 பில்லியனுக்கு அதிகமான பரிவர்த்தனைகள் செய்து யுபிஐ சாதனை படைத்துள்ளது.  இது கடந்த ஜூலை மாதத்தை காட்டிலும் 67 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.