மடிக்கக்கூடிய தொலைபேசிகள் மிகவும் எளிதில் சேதமடையக் கூடியவை. கீழே விழுவதால் அவற்றின் டிஸ்ப்ளே சேதமடைந்தால், உங்களுக்கு ஒரு பெரிய செலவு ஏற்படும். மடிக்கக்கூடிய தொலைபேசி டிஸ்ப்ளேக்கள் மிகவும் விலை உயர்ந்தவை. மேலும், அதை பழுதுபார்ப்பதற்கும் அதிக செலவாகும். இப்போது, சாம்சங் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளது. சாம்சங், ஃபிளெக்ஸ் டைட்டானியம் என்ற புதிய டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரவிருக்கும் கேலக்ஸி மடிக்கக்கூடிய தொலைபேசிகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவற்றை மெல்லியதாகவும் மாற்றும். இந்த புதிய தொழில்நுட்பம் தொலைபேசியின் தோற்றத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் நீடித்து உழைக்கும் தன்மையையும் அதிகரிக்கும்.
புதிய ஃப்ளெக்ஸ் டைட்டானியம் தொழில்நுட்பம் என்பது என்ன.?
ஃபிளெக்ஸ் டைட்டானியம் என்பது சாம்சங்கின் புதிய மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கட்டமைப்பாகும். இது வழக்கமான ஆதரவுப் பொருட்களுக்குப் பதிலாக, டைட்டானியத்தால் ஆன இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது. இதில் OLED டிஸ்ப்ளேவின் கீழ் ஒரு டைட்டானியம் கலப்பு உலோகப் படலமும், அதைத் தொடர்ந்து அதன் கீழ் ஒரு டைட்டானியம் ஆதரவுத் தட்டும் இடம்பெற்றுள்ளன. முழு டிஸ்ப்ளே தொகுதியும் இந்த ஆதரவுத் தட்டின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த அடுக்குகள் இணைந்து, டிஸ்ப்ளேவின் எடையை அதிகரிக்காமல் அதன் நீடித்துழைக்கும் தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. பாரம்பரிய பாலிமர் படலத்தை விட இந்த டைட்டானியம் கலப்பு உலோகப் படலம், 20 மடங்கு வலிமையானது என்று சாம்சங் கூறுகிறது. மேலும், இந்த புதிய தொழில்நுட்பம், டிஸ்ப்ளே பாகங்களுக்கு இடையேயான காற்று இடைவெளியை நீக்கி, மடிப்புகளை குறைத்து, தொலைபேசியை மடிப்பதை எளிதாக்குகிறது.
புதிய தொழில்நுட்பத்தில் டைட்டானியம் ஏன் பயன்படுத்தப்படுகிறது.?
விண்கலங்கள், செயற்கைக்கோள்கள், மற்றும் செவ்வாய் கிரக ரோவர்களின் சக்கரங்கள் கூட டைட்டானியத்தால் செய்யப்படுகின்றன. அதன் அசாதாரண வலிமை மற்றும் அரிப்பு எதிர்ப்புத் திறன் ஆகியவை இதன் நன்மைகளில் அடங்கும். இதை வளைப்பது கடினமாக இருந்தாலும், சாம்சங் நிறுவனம் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, வலிமைக்கும் நெகிழ்வுத்தன்மைக்கும் இடையிலான சரியான சமநிலையைக் கண்டறிந்துள்ளது.
புதிய காட்சியமைப்பால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்.?
ஃபிளெக்ஸ் டைட்டானியம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் டிஸ்ப்ளேக்கள், தெளிவான காட்சிகள், மேம்பட்ட வண்ணம் மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றை வழங்கும் என்று கூறப்படுகிறது. எந்தெந்த மடிக்கக்கூடிய போன்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்த ரகசியம் ஜூலை 22-ம் தேதி நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மடிக்கக்கூடிய போன்களின் தோற்றம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றை முழுமையாக மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது.
