ஸ்மார்ட்போன் கேமராக்கள் இன்னும் தொழில்முறை உபகரணங்களை விட ஒரு படி பின்தங்கியிருப்பதாக தோன்றினால், அந்த குறை விரைவில் நீங்கும். வரவிருக்கும் ஐபோன் 18 ப்ரோ, புகைப்படக்கலையில் அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஒரு ஃபோனுக்கு DSLR-பாணியிலான கட்டுப்பாட்டை கொண்டுவரும் ஒரு அம்சத்தை கொண்டிருக்கும். மென்பொருளை மட்டும் நம்பியிருக்காமல், கேமராவிற்குள் ஒளி நுழையும் விதத்தை நேரடியாக மாற்றும் ஒரு வன்பொருள்(Hardware) மேம்படுத்தலை ஆப்பிள் அறிமுகப்படுத்தக்கூடும்.
இது, குறிப்பாக சிக்கலான ஒளி நிலைகளில், அன்றாட புகைப்படக்கலையை மிகவும் இயல்பானதாகவும், செயற்கைத்தன்மை குறைந்ததாகவும் உணரச் செய்யக்கூடும். இந்த மாற்றம், தானியங்கி முடிவுகளை மட்டும் வழங்குவதை விடுத்து, பயனர்களுக்கு அதிகக் கட்டுப்பாட்டை அளிக்க ஆப்பிள் நோக்கம் கொண்டுள்ளது என்பதை உணர்த்துகிறது.
ஐபோன் 18 ப்ரோவில் உள்ள மாறக்கூடிய துளை அமைப்பு (Variable Aperture System) என்றால் என்ன.?
ஐபோன் 18 ப்ரோவின் மிகப்பெரிய சிறப்பம்சம், அதில் இடம்பெறும் என வதந்தியாக பரவிவரும் மாறும் துளை அமைப்பு (variable aperture system) ஆகும். நிலையான துளைகளை பயன்படுத்தும் தற்போதைய ஸ்மார்ட்போன்களை போலல்லாமல், இந்த அமைப்பானது லென்ஸுக்குள் நுழையும் ஒளியின் அளவை இயல்பாகவே சரிசெய்யும் திறன் கொண்டது.
குறைந்த ஒளியில், அதிக ஒளியை பிடிப்பதற்காக துளை அகலமாகத் திறக்கிறது. இது பிரகாசத்தை மேம்படுத்துவதோடு, இரைச்சலையும் குறைக்கிறது. பிரகாசமான சூழ்நிலைகளில், அதிகப்படியான வெளிச்சத்தைத் தவிர்க்கவும், சமநிலையை பராமரிக்கவும், அது குறுகுகிறது. இது சிறந்த பின்னணி மங்கலை உருவாக்கவும் உதவுகிறது. இதனால், உருவப்படங்கள் மேலும் தொழில்முறையாக(Professional) தோற்றமளிக்கின்றன.
இந்த அணுகுமுறை, DSLR கேமராக்களைப் போன்றது. அதில் ஆழம் மற்றும் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்துவதில் துளை முக்கிய பங்கு வகிக்கிறது. விளைவுகளை உருவகப்படுத்த மென்பொருளை சார்ந்திருப்பதற்குப் பதிலாக, ஐபோன் 18 ப்ரோ, மேம்பட்ட விவரம் மற்றும் துல்லியத்துடன் மிகவும் இயல்பான தோற்றமுடைய புகைப்படங்களை வழங்க முடியும்.
இது, இனிவரும் காலங்களில் ஸ்மார்ட்போன் புகைப்படக்கலையை எவ்வாறு மாற்றும்.?
வன்பொருள் அடிப்படையிலான புகைப்படக்கலையை நோக்கிய நகர்வு, இத்துறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கக்கூடும். பிராண்டுகள், கணக்கீட்டு புகைப்படக்கலையை பெரிதும் நம்பியிருந்தன. ஆனால், இந்த அமைப்பு ஒளியியல் துல்லியத்தில் கவனம் செலுத்துகிறது.
பயனர்கள் தெளிவான படங்கள், மேம்பட்ட குறைந்த ஒளி செயல்திறன் மற்றும் மிகவும் யதார்த்தமான வண்ணங்களை எதிர்பார்க்கலாம். மேலும், இது புகைப்படங்கள் எப்படி தோற்றமளிக்கின்றன என்பதில், குறிப்பாக உருவப்படங்கள் மற்றும் நெருக்கப் புகைப்படங்களில், சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகிறது.
சன்னி ஆப்டிகல், லக்ஸ் ஷேர் ஐசிடி மற்றும் எல்ஜி இன்னோடெக் போன்ற ஆப்பிளின் விநியோகஸ்தர்கள் முக்கிய பாகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது, இந்த மேம்படுத்தல் எவ்வளவு சிக்கலானது என்பதைக் காட்டுகிறது. 2026-ம் ஆண்டின் நடுப்பகுதியில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றால், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற போட்டியாளர்கள் இதே போன்ற அம்சங்களுடன் இதை பின்பற்றக்கூடும். இது ஸ்மார்ட்போன் கேமராக்களை தொழில்முறை தரத்திற்கு நெருக்கமாகக் கொண்டு சென்று, மேம்பட்ட புகைப்படக் கருவிகளை அனைத்து சாதனங்களிலும் மிகவும் பொதுவானதாக மாற்றக்கூடும்.
