கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியது மக்களைப் பெரும்பீதியடையச் செய்தது போல பெகசஸ் பேராபத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாட்டின் முக்கியப் புள்ளிகளையும் பெரும்பீதியடையச் செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒருங்கிணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் எதிரொலியாக கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் சிலர். இஸ்ரேலியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அவசர அவசரமாக பிரான்ஸுக்குப் பயணிக்கிறார். அங்கே அதிபர் மெக்ரானைச் சந்திக்கிறார். இந்த பெகசஸ் பெருஞ்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களில் மெக்ரானும் ஒருவர்.






நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு பக்கம் மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம் மற்றும் சசி குமார் இந்த விவகாரத்தில் விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். 


2019 'தி கார்டியன்' ஊடகத்துக்குக் காணொளி வழியாகப் பேட்டியளித்த எட்வார்ட் ஸ்நோடென் ’பெகசஸ்  தடுப்பூசியல்ல வைரஸ். என்.எஸ்.ஓ., வைரஸ்களை விற்பனை செய்கிறது. இது அதிர்ச்சி என்னவென்றால் நமக்கு என்.எஸ்.ஓ., மட்டும்தான் தெரியும். அவர்களைப் போன்ற பலர் இருக்கிறார்கள்’ என்றார். பெகசஸ் என்பது அடிப்படையில் கிரேக்க புராணங்களில் வரும் இறக்கைகள் கொண்ட விநோதக் குதிரை. அந்த விநோதக் குதிரைதான் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., அமைப்பின் பெகசஸும் 




 2019ல் பாரிஸில் நடந்த மில்லிபோல் வர்த்தகக் கண்காட்சியில்தான் முதன்முதலில் பெகசஸ் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நியூயார்க்கைச் சேர்ந்த ஒருவர் படம்பிடித்தார்.இதனை காட்சிப்படுத்தியது என்.எஸ்.ஓ., குழு. 2010ல் என்.எஸ்.ஓ., நிறுவப்பட்டது தொடங்கி தங்களது பெகசஸ் என்னும் பேராயுதத்தை அந்த நிறுவனம் காட்சிப்படுத்தியது அதுவே முதல்முறை. 2019ல் படம்பிடிக்கப்பட்ட பெகசஸ் பார்ப்பதற்கு எப்படி இருந்தது தெரியுமா? கட்டம் கட்டமான சீட்டுகள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்பட்டு ஒரு குட்டி செல்ஃபோன் டவர் போல இருக்கும்(Horizontally stacked cards). அதனை ஒரு வேனில் பொருத்தியிருந்தார்கள். தங்களது பெகசஸ் அமெரிக்காவில் மட்டும் வேலை செய்யாது என முன்னறிவிப்பு கொடுத்தார்கள். 


உண்மையில் பெகசஸின் வேலையும் செல்போன் டவர்கள் போல வேலை செய்வதுதான்.  மொபைல போன்களை தாம்தான் செல்ஃபோன் டவர் என நம்ப வைக்கும். மொபைல் போன்கள் இதன் தொடர்பில் வந்ததும் போன்களின் முழுக்கட்டுப்பாடும் இந்த டவர்களுக்கு வந்துவிடும். இல்லையென்றால் நிஜ செல்ஃபோன் டவர்களையே ஹேக் செய்து செல்ஃபோன்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.  நெட்வொர்க் இன்ஜெக்‌ஷன் என்னும் இந்த முறையால்தான் ஸ்னோடென் குறிப்பிட்ட மற்ற ஸ்பைவேர் நிறுவனங்களில் இருந்து என்.எஸ்.ஓ.வின் பெகசஸை உளவுச்சந்தையில் முன்னணியில் வைத்திருக்கிறது. 




இஸ்ரேலிய உளவுப்பிரிவு அதிகாரிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பெகசஸ் அல்லது ’க்யூ சூட்’ (Q Suite)   எந்தவொரு மூலையிலிருந்தபடியும் மொபைல் போன்களில் இருந்து தரவுகளை எடுக்க உதவும். 2018ம் ஆண்டின் முற்பகுதி வரை பெகசஸ் மொபைல் குறுஞ்செய்தி வழியாகவோ அல்லது வாட்சப் செய்திகள் வழியாகவோதான் தனது உளவு வேலையைச் செய்து வந்தது. ஈ.எஸ்.ஈ.எம்.,(Enhanced Social engineering message) எனப்படும் மேம்படுத்தப்பட்ட செய்தி வழியாகதான் மொபைல் ஃபோன்களை பாதித்து வந்தது. 


ஏம்நெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனம் தனது 2019ம் ஆண்டு அறிக்கையில் இந்த மேம்படுத்தப்பட்ட செய்தி அனுப்புதல் முறை மற்றும் நெட்வொர்க் இன்ஜெக்‌ஷன் முறைபற்றிக் குறிப்பிட்டிருந்தது.  மொபைல் போன்களுக்கு வெறும் புஷ் நோட்டிபிகேஷன்கள் அனுப்புவதே சில சமயங்களில் போதுமானது. ஆப்பிள் ரக ஃபோன்களுக்கு இந்த பெகசஸால் பாதிப்பு அதிகம். 


தற்போது பெகசஸ் உளவு பார்த்தைப் பற்றிய தகவலைக் கசியவிட்ட சிட்டிசன்ஸ் லேப் நிறுவனம்தான் 2016ல்  லுக் அவுட் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் ரக போன்களை பெகசஸ் எளிதில் பாதிக்கும் என்கிற உண்மையை வெளியிட்டது. 




2019ல் என்.எஸ்.ஓ., குழு மீது வாட்சப் குற்றம்சாட்டியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.வாட்சப்புக்கு அநாமதேய வீடியோகால்கள் வரும். அதனைப் பயனாளர் எடுக்கவேண்டிய அவசியம் கூட இல்லை. வீடியோகால் அழைப்பே அவரது போனை பெகசஸின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடும். இதனை வாட்சப் தலைவர் வில் காதர்காட் தெரிவித்திருந்தார். 


பெகசஸுக்கு டார்க்கெட்டின் செல்ஃபோன் எண் மட்டுமே போதுமானது. இதைத்தான் ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது 2019 how modi won india புத்தகத்திலும் குறிப்பிட்டிருந்தார் என்பதை இங்கே பதிவு செய்யவேண்டியுள்ளது. 


அது சரி, உங்களது ஃபோனை பெகசஸ் உளவு பார்க்கிறதா என்பதை எப்படிக் கண்டறிய? 


கண்டறிய முடியாது, ஒருவேளை டிஜிட்டல் பாதுகாப்புகளுக்கான பரிசோதனைக் கூடங்களில் அதனை சோதனை செய்து கண்டறிய முடியும். பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் நமது ஃபோனை இனிமேலும் உளவு பார்ப்பதைத் தவிர்க்க ஒரே வழி பயனாளர் தனது போனில் உபயோகப்படுத்தும் க்ரோம், ஓபரா, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற தேடல் தளத்தை ஒட்டுமொத்தமாக மாற்றுவது மட்டும்தான் என பெகசஸ் தனது சிற்றேட்டில் (Brochure)  குறிப்பிட்டுள்ளது.