Health with AI Technology: செயற்கை நுண்னறிவு தொழில்நுட்பம் மூலம் செயல்படும்,  ஆரோக்கியம் தொடர்பான முக்கிய கேஜெட்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. 


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:


செயற்கை நுண்ணறிவு (AI) அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறது. சமீபகாலமாக மருத்துவத் துறையிலும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து நோயாளிகளைக் காப்பாற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிதும் பயன்படும் என நம்பப்படுகிறது. இந்நிலையில்,  செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, புற்றுநோயைக் கண்டறியும் சாதனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் இந்த கருவி மூலம் பல்வேறு வகையான புற்றுநோய்களை கண்டறிய முடியும். இதற்கு ஒரு சொட்டு ரத்தம் போதும். புற்றுநோய் மட்டுமல்ல,  மாரடைப்பை கூட முன்கூட்டியே கண்டறியும் ஏஐ கேட்ஜெட்களும் விரைவில் சந்தைக்கு வரவுள்ளன. இதயத்தின் செயல்பாட்டை இந்த கேட்ஜெட்கள் மூலம் கணிக்க முடியும். அரித்மியா போன்ற நோய்களையும் கண்டறிந்து, நம்மை முன்கூட்டியே எச்சரிக்கிறது.


புற்றுநோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?


புற்றுநோயை கண்டறியும் சாதனம் சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. உலர் இரத்தப் பரிசோதனை மூலம் கணையம், இரைப்பை, பெருங்குடல் புற்றுநோய்களைக் கண்டறியும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த கருவி, பாரம்பரிய கண்டறியும் முறைகளை பின்பற்றாமல் பல்வேறு வகையான புற்றுநோய்களை கண்டறியும். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இரத்த புரதங்கள் மற்றும் மைக்ரோ ஆர்என்ஏக்கள் சோதிக்கப்படுகின்றன. இதன் மூலம் 82 முதல் 100% துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


AIக்கும் தற்போதைய அமைப்புக்கும் என்ன வித்தியாசம்?


குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள புற்றுநோய்களைக் கண்டறிய, தற்போது கொலோனோஸ்கோபி சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், இரைப்பை புற்றுநோயைக் கண்டறிய காஸ்ட்ரோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த சோதனைகள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை. மேலும், இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு நன்கு பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் தேவை. ஆனால் செயற்கை நுண்ணறிவு மூலம், ஒரு துளி ரத்தத்தில் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இருப்பினும், இந்த சாதனம் இன்னும் சந்தையில் முழுமையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. அதோடு சாதனம் தொடர்பாக இன்னும் கூடுதல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மாரடைப்பைக் கணிக்கும் தொழில்நுட்பம்:


இதயம் தொடர்பான பல பிரச்சனைகளைக் கண்டறிய AI கேஜெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. கார்டியாக் அரித்மியாவுடன், இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவ சாதனம் ஏற்கனவே சீனாவின் வுஹானில் உள்ள டாங்ஜி மருத்துவமனையில் வார்ன் சிஸ்டம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் உதவியுடன் சுமார் 350 பேருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் வாட்சிலும் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


குறிப்பு:


பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சிகள் மற்றும் சுகாதார இதழ்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் உங்கள் புரிதலுக்காக இங்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த தகவல் மருத்துவ பராமரிப்பு அல்லது சிகிச்சைக்கு மாற்றானது என நாங்கள் பரிந்துரைக்கவில்லை.