தபால் நிலையத்தில் உள்ள பொதுச்சேவை மைய கவுண்டர்களிலே இனி பாஸ்போர்ட்டை சுலபமாக பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்தியுள்ளது.


ஒருவர் தொழில் நிமித்தமாக அல்லது சுற்றுப்பயணியாக வெளிநாடுகளுக்குச்  செல்ல வேண்டும் என்றாலே பாஸ்போர்ட்  கட்டாயம் தேவை. ஒருவேளை வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டும் என்று நினைத்தாலே பாஸ்போர்ட் பெறுவதற்கு அதன் அலுவலகத்தில் கால் கடுக்க நிற்க வேண்டும் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். மேலும் இதற்காக ஒரு நாள் விடுப்பு எடுத்து தான் பாஸ்போர்ட் எடுப்பது தொடர்பான அதன் பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். எப்படியோ பாஸ்போர்ட் தொடர்பான அனைத்துப்பணிகளையும் முடித்துவிட்டாலும், பாஸ்போர்ட் கையில் வந்து சேருவதற்கு காலம் எடுக்கும். இந்நிலையில் பாஸ்போர்ட் கிடைப்பதை எளிதாக்கும் வகையில் அரசு பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.



அதன்படி, தற்பொழுது உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே நீங்கள் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. குறிப்பாக தபால் நிலையங்களில் உள்ள பொதுச்சேவை மையத்தின் கவுண்டர்களின் (common service center) இதற்காக விண்ணப்பிக்கும் வசதிகள் உள்ளது என சமீபத்தில் இந்திய அஞ்சல்துறை ஒரு டிவிட்டர் செய்தி வாயிலாக தெரிவித்துள்ளது. மேலும் பாஸ்போர்டினை விண்ணப்பிக்க ஆன்லைன் மூலமாகவும் அல்லது போஸ்ட் ஆபிஸின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று விண்ணப்பிக்கும் வசதிகள் உள்ளன.






 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் எப்படி விண்ணப்பிப்பது?


பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் போது அதற்கானக் கட்டணத்தினையும் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.


ஆன்லைனில் தரப்பட்ட அனைத்துத் தகவல் மற்றும் உங்களது கோரிக்கை ஏற்கப்பட்டவுடன் உங்களுக்கு ஒரு தேதி ஒதுக்கப்படும்.


உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த தேதியில் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு ரசீது மற்றும் பிறப்புச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற தேவைப்படும் பிற ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.


இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பதாரரின் கைரேகை மற்றும் கண் ரேகை எடுக்கப்படும். இந்த அனைத்து வேலைகள் முடிந்த பிறகு 15 நாட்களில் விண்ணப்பப் பணி நிறைவு பெறும். பின்னர் உங்களுக்கு பாஸ்போர்ட் வந்துசேரும்.