பிரபல மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் விரைவில் தனது அடுத்த மொபைல்போனை சந்தைப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களை வருடா வருடம் சந்தைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் ஐபோன் 13 மாடல் மொபைல்போன்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் Special Edition மாடல்களை இந்த ஆண்டு சந்தைப்படுத்த இருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில் இரண்டு Special Edition மாடல்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம் , தனது Apple iPhone SE 3 மாடலை வருகிற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.
SE 3 2022 ஆனது A15 பயோனிக் சிப்செட்டில் இயங்கும் என கருதப்படுகிறது. A15 பயோனிக் சிப்செட் சமீபத்தில் வெளியான ஐபோன் 13 மாடலில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. iPhone SE 3 கேமராவை பொருத்தவரையில் 12MP பின்பக்க கேமராவையும் , 8MP அளவிலான முன்பக்கக் கேமராவையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 5 ஜி சேவையை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் Special Edition மாடல்களில் ஆப்பிள் ஃபேஸ்ஐடி லாகினை அறிமுகப்படுத்தியது இல்லை. ஆனால் Apple iPhone SE 3 இல் அந்த வசதியை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா போன்ற ஐபோன் மொபைலுக்கு மவுசு இருக்கும் நாடுகளை குறி வைத்து இவ்வகை புதிய ஸ்பெஷல் எடிசன் மொபைல் போன்கள் சந்தைப்படுத்தபட உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விலையை பொருத்தவரையில் ஐபோனின் Special Edition மாடல்கள் அனைத்தும் 30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகத்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் தற்போது அறிமுகமாகவுள்ள Apple iPhone SE 3 ஆனது OnePlus மற்றும் Samsung மொபைலுக்கு போட்டியாக களமிறங்கும் என்பதால் கிட்டத்தட்ட அந்த பிராண்டின் மீடியம் பட்ஜெட் மொபைல் போன்கள் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். 2022 இல் வெளியாகவுள்ள ஐபோன் SEயின் விலை தோராயமாக ₹45,000 க்குள் இருக்கலாம்.