மழையால் பெருநகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றில் இருந்து விடுபட, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கியுள்ள எதிர்கால வாகனங்களுக்கான வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 


எங்கும் AI.. எதிலும் AI..


கடந்த சில மாதங்களாகவே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான விவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. திரைப்படங்களில் தொடங்கி, அலுவலகத்தில் விடுப்பு விண்ணப்பம் எழுதுவது வரையிலும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு விரிவடைய தொடங்கியுள்ளது.


பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை உள்ளீடாக தந்துவிட்டால், அதற்கேற்ற துல்லியமான முடிவுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கி வருகிறது. ஒருதரப்பினர் இதற்கு ஏகோபித்த வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக ஹாலிவுட்டில் திரைப்படங்களுக்கான கதையை எழுதுவது உள்ளிட்ட பணிகளிலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதை கண்டித்து எழுத்தாளர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். 


இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:


ஏற்கனவே மேலைநாடுகளை சேர்ந்த நடிகர் நடிகைகள் இந்தியர்களாக இருந்தால் அவர்களது தோற்றம் எப்படி இருக்கும், பெரும் பணக்காரர்கள் ஏழையாக இருந்தால் அவர்களது தோற்றம் எப்படி இருக்கும் என்பது போன்ற பல்வேறு கற்பனையில், செயற்கை நுண்னறிவு தொழில்நுட்பம் வடிவமைத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில் தான் இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம், வடிவமைக்கப்பட்ட சில புகைப்படங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.






மழை பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?


இந்தியாவில் மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மழைகாலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவது, கழிவுநீர் கலந்தோடுவது என்பது சாதாரண நிகழ்வாக தொடங்குகிறது. இதனால், மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதை பல நேரங்களில் ஊடகங்களில் காண முடிகிறது. இந்நிலையில் அந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, எதிர்காலத்தில் மழை பாதிப்பில் இருந்து தப்பிக்க, வாகனங்கள் எப்படி வடிவமைக்கப்படலாம் என்பதை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மும்பையை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார்.


இப்படி எல்லாமா வரும்?


இதுதொடர்பான புகைப்படங்களில் படகு, ஸ்கூட்டர், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, ரயில் பெட்டி மற்றும் மினி வேன் ஆகியவை நீரில் பயணிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. அதோடு, மழை நீர் உள்ளே புகாதவாறு வாகனங்களின் மேலே கண்ணாடி குடுவைகள் அமைக்கப்பட்டு இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன.  மழையில் நனைவதை தவிர்ப்பதோடு, அதிகப்படியான மழைக்காலங்களில் மீட்பு பணிகளில் பயன்படுத்துவதற்கான வகையிலும் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.   இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அந்த நபர், மும்பையில் தற்போதுள்ள சூழலுக்கு இந்த வடிவமைப்பிலான வாகனங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI