டோக்கியோ பாரலிம்பிக் தொடரின் நான்காவது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் விளையாட்டின் அரை இறுதியில் இந்தியாவின் பவினாபென் விளையாடினார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றதன் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். 


சீன வீராங்கனை மியா ஜங்கை எதிர்த்து அவர் போட்டியிட்டார். இதுவரை இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ள 11 போட்டிகளிலும் சீன வீராங்கனையே வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இன்றைய ஆட்டத்தில் பவினா பென் ஆதிக்கம் செலுத்தினார். 11-7, 7-11, 4-11, 11-9, 8-11 என்ற புள்ளிக்கணக்கில் ஐந்து கேம்களில் 3 கேம்களை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் பவினா. இதனால், பவினாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டு உலக தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஜவ் யிங்கை எதிர்த்து விளையாட உள்ளார். சவால்கள் நிறைந்ததாக இருக்கும் இந்த போட்டியிலும், பவினா தனது சிறந்த பர்ஃபாமென்ஸை தொடர்ந்தால், இந்தியாவுக்கு தங்கம் நிச்சயம்! 






Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!





பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். 


அந்த வகையில்,  பவினா படேல் (C4) க்ரூப்பில் விளையாடுபவர். நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அவர் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையான செர்பியா நாட்டின் பெரிக் ரென்கோவிக்கை எதிர்த்து விளையாடினார். இதில் 11-5,11-6,11-7 என்ற கணக்கில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த செர்பிய வீராங்கனையை தோற்கடித்தார். மேலும் 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் கிளாஸ் 4 பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் சாம்பியனான பெரிக் ரென்கோவிக்கை வீழ்த்தி பெரும் சாதனையை படைத்தார். அதே போல, இன்றைய போட்டியில் அவர் எதிர்த்து போட்டியிட்ட மியா ஜங், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற, உலக தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதான பவினாபெனுக்கு ஒரு வயதாக இருந்த போது போலியா நோய் தாக்கியுள்ளது. இதனால் இவருடைய இரண்டு கால்களிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தன்னுடைய சிறிய வயது முதல் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்த தொடங்கியுள்ளார். தன்னுடைய உடற்தகுதிக்காக டேபிள் டென்னிஸ் விளையாட தொடங்கிய அவர், இப்போது பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், டோக்கியோ பாரலிம்பிக் தொடரில் இந்தியாவின் முதல் பதக்கத்தையும் உறுதி செய்துவிட்டார். அது, தங்கமா வெள்ளியா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், பவினா தங்கம் வென்று வர அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 


Tokyo Paralympics | டோக்கியோ பாராலிம்பிக்கில், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த பவினா : கடந்துவந்த பாதை !