தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே நாட்டார் குளம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் பேச்சியம்மாள் தம்பதியினரின் மகள் சுப்புலட்சுமி என்ற மேகலா.  18 வயதான இவர் பாளையங்கோட்டை சாராடக்கர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர், நாட்டார்குளத்தில் இந்திராநகர் எனும் இடத்தில் உள்ள சிறிய வீட்டில் தான் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு அண்ணன். ஒருவர் கொடிமரத்தான், இளையவர் பேச்சிமுத்து. இவர்கள் இருவரும்ம் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார்கள்.   மேகலாவின் தந்தை விவசாய கூலியாக உள்ளார். தாயார் பேச்சியம்மாள் செங்கல் சூளையில் சுமை தூக்கும் தொழிலாளியாக  வேலை பார்த்து வருகிறார்கள்.




சிறு வயதில் இருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட மேகலாவை நெல்லை மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சேர்த்துள்ளனர் பெற்றோர்.  இந்த சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சண்முக நாதன் இவருக்கு வில்வித்தையில் அனைத்து  வித்தையையும் கற்று கொடுத்தார். இரண்டு வருடத்தில் தேர்வு பெற்ற மேகலா  சர்பதேச விளையாட்டு போட்டியில் விளையாட தயாரானார். முதலில் மாநில அளவில் சிவகாசியில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு  இரண்டாவது இடத்தினை பெற்றார். தொடர்ந்து இவரது சாதனை  தொடர ஆரம்பித்தது.




இலங்கையில் நடந்த கொழும்பு ஓபன் சர்வதேச வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். மறுநாள் நடந்த சோழன் உலக சாதனை நிகழ்ச்சியும் கலந்து கொண்டு உலக சாதனையாளர் சான்றிதழையும் பெற்றுள்ளார்.  




மேகலாவுக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தி வரும் நெல்லை மாவட்ட சர்வதேச வில்வித்தை சங்க பொதுச் செயலாளர் டாக்டர் சண்முகநாதன் இது குறித்து கூறுகையில், ”நாங்கள் வில்வித்தையில் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து போட்டியில் கலந்து கொள்ள செல்வோம். கொழும்பு ஓபன் சர்வதேச வில்வித்தை போட்டியில் நடக்க உள்ளதை அறிந்தோம். எனவே நாங்கள் 27 பேர் அங்கு பயணம் செய்தோம். அதில் 18 வயதினருக்கான போட்டியில் மேகலா கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். மறுநாள் சோழன் உலக சாதனை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உலக சாதனையாளர் ஆனார்.  அரசு மேகலா போன்ற கிராமப்புற  மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும். கிராம மக்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.




மாணவி மேகலா இது குறித்து கூறுகையில், “எனக்கு சிறுவயதிலிருந்தே குறி வைத்து அடிப்பது பிடித்த விஷயம் பாளையங்கோட்டை சாராள் டக்கர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பின் திருநெல்வேலி மாவட்ட வில்வித்தை சங்கம் குறித்து அறிந்தேன். இதுகுறித்து எனது பெற்றோரிடம் கூறினேன் அவர்கள் என்னை ஊக்குவித்து அங்கு சேர்த்தனர். நன்றாக பயிற்சி எடுத்த பின் முதன்முதலாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது சிவகாசியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றேன். அப்போது முதன் முதலில் போட்டியில் கலந்து கொள்வதால் சிறிது பயம் இருந்தது. அதன் பின் எனக்கு எந்த பயமும் இல்லை தேசிய அளவில்  பல போட்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளேன். இப்போது முதன் முதலில் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளேன். அங்கு நான் 18 வயது பிரிவில் கலந்து கொண்டேன். 30 மீட்டர் வில் அம்பு வித்தையில்  6 ரவுண்டு விளையாடினேன். ஒரு ரவுண்டுக்கு 6 அம்புகள்  வீசினேன்.  இதில் அனைத்திலும் நான் முதலிடம் பிடித்தேன்”  என்று கூறினார்.


மேகலாவை பொறுத்தவரை தற்போது ஏழ்மையான குடும்பத்திலேயே வசித்து வருகிறார். வீட்டில் உள்ள நான்கு பேரும் கூலித்தொழிலாளிகளே. மேலும் ஓட்டு வீட்டில் ஒரே ஒரு அறையில் தான் வசித்து வருகிறது இவரது குடும்பம். ஆனாலும் மேகலாவுக்கு போட்டியில் தொடர்ந்து வெற்றி பெறுவதோடு ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.  இந்த மாணவிக்கு சரியான உதவி கிடைத்தால் நிச்சயம்  ஐ.ஏ.எஸ் ஆகி விடுவார் . அதோடு மட்டுமல்லாமல் வில்வித்தையில் தொடர்ந்து உலக சாதனை புரிந்து  தமிழகத்துக்கு சிறப்பை பெற்றுத்தருவார்.