சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான திரீ எக்ஸ் த்ரீ கூடைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் பஞ்சாப்பை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மகளிருக்கான இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கேரளா.


கூடைப்பந்து:


இந்திய கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் இணைந்து நடத்திய இந்தியாவிலேயே முதன் முறையாக  த்ரீ எக்ஸ் த்ரீ தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப்  போட்டி சென்னை நேரு உள் உள்விளையாட்டு அரங்கில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் என மொத்தம் 56 அணிகள் பங்கேற்றன. இதில் இன்று அதாவது செப்டம்பர் 24ஆம் தேதி  நடைபெற்ற ஆடவர் அரையிறுதி போட்டிகளில் கேரளா அணியை வீழ்த்திய பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியை வென்ற தமிழ்நாடு அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.


தமிழ்நாடு சாம்பியன்:


இதில் தமிழ்நாடு அணி பஞ்சாப் அணியை 17க்கு 16 என்கிற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. பஞ்சாப் அணி இரண்டாம் இடத்தையும் கேரளா அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. இது தமிழ்நாடு அணி தனது இரண்டாவது சாம்பியன் பட்டமாகும். மேலும் மகளிருக்கான அரையிறுதி போட்டியில் டெல்லி அணியிடம் வெற்றியை பறி கொடுத்த தமிழ்நாடு அணி நான்காம் இடம் பிடித்தது. 


மகளிருக்கான இறுதிப்போட்டியில் கேரளா அணி டெல்லி அணியை 20 க்கு 15 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டெல்லி அணி இரண்டாம் இடமும் இந்தியன் ரயில்வேஸ் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.


பரிசுத்தொகை:


ஆண்கள் பெண்கள் என இரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த அணிக்கு ரொக்கப் பரிசாக 3 லட்சம் ரூபாயும், 2 வது இடம் பிடித்த அணிக்கு 2 லட்சம் ரூபாயும், மூன்றாவது இடம் பிடித்த அணிக்கு 1 லட்சம் ரூபாயும்,கோப்பைகளை இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.


இந்த தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள 37 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.