ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் வரும் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் பயிற்சி போட்டியில் களமிறங்க உள்ளது. இந்த உலகக் தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்ஸி கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் 2017ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வாகியுள்ளார். இதனால் அவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய ஜெர்ஸியை போட்டு ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், "நீங்கள் இந்த கலர் ஜெர்ஸியை போட்டு நான் இதுவரை பார்த்தே இல்லையே அப்பா? என்று கூறிய என்னுடைய மகளை இந்தப் படத்தில் என்னால் விட முடியவில்லை. உனக்கு என்ன தோன்றுகிறது ப்ரித்தி?" என்று பதிவிட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில ஆண்டுகளாக வெறும் டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பிடித்து வருவதால் அவரால் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 ஜெர்ஸியை அணியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 


 






தற்போது  முதல் முறையாக 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருக்கு இந்த வாய்ப்பு  கிடைத்துள்ளது. இதனால் தான் அவருடைய மகள் இந்த கேள்வியை கேட்டுள்ளார். முன்னதாக ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியானது.  அதன்படி இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடர் முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு அக்டோப்டர் 18ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்த்து முதல் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 20ஆம் தேதி இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியும் துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த இரண்டு பயிற்சி போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செனலில் நேரலையாக வரும் என்று கூறப்படுகிறது. 




இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றில் தன்னுடைய முதல் போட்டியில் அக்டோபர் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளது. அந்தச் சுற்று போட்டிக்கு முன்பாக இரண்டு வலுவான அணிகளுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது வீரர்களுக்கு நல்லதாக அமைந்துள்ளது. அதன்பின்னர் அக்டோபர் 31ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. பின்னர் நவம்பர் 3ஆம் தேதி ஆஃப்கானிஸ்தனுடன் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகளுடன் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. 



இம்முறை சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் சூப்பர் 12 சுற்று மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.