இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.


விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதே சமயத்தில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் இலங்கையில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த போட்டிகளில் இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், தீபக் சாஹர், பிரித்விஷா ஆகியோரது ஆட்டம் பாராட்டத்தக்க அளவில் இருந்தது. மேலும், இலங்கைக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 9வது முறையாக ஒருநாள் போட்டித் தொடரை வென்றது.


இந்த நிலையில், இலங்கை அணியுடனான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான முதல் டி20 போட்டி இன்று அந்த நாட்டின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தஸீன் ஷனகா பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான்,  ப்ரித்வி ஷா விளையாடி வருகின்றனர். தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி அணியில் அறிமுகமாகியுள்ளார்.






 


இந்திய அணி விவரம்:


ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ப்ரித்வி ஷா,சூர்ய குமார் யாதவ்,  இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர்,புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


 






இலங்கை அணி விவரம்:


தசுன் சனகா தலைமையிலான இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுகா, தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா, அசந்த் பண்டாரா, வனிந்து ஹசரங்கா, சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, இசுரு உடனா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.