அது என்ன 'இங்கிலாந்து மாடல்'?


2015-ல் இயான் மோர்கன் இங்கிலாந்தின் கேப்டனாக பொறுப்பேற்றதும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணித் தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அலைஸ்டர் குக், இயான் பெல், ஆண்டர்சன் மாதிரியான டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட்டுகள் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு பேட்டிங், பவுலிங்கோடு சேர்த்து பல்வேறு பங்களிப்புகளையும் அணிக்கு தரக்கூடிய ஆல் ரவுண்டர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர்.  ஒரு வீரர் வெறுமனே ஒற்றை திறனின்  அடிப்படையில் மட்டும் அணியில் இடம்பெற முடியாது என்பதை உறுதிப்படுத்தினார்  மோர்கன்.




இதன் அடிப்படையில் ஸ்டோக்ஸ், வோக்ஸ், மொயின் அலி, கர்ரன் சகோதரர்கள் என பலதரப்பட்ட ஆல் ரவுண்டர்கள் அணிக்குள் கொண்டுவரப்பட்டனர். ஸ்விங் பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இங்கிலாந்து அணி  அதிவேகப்பந்து வீச்சுக்கு முன்னுரிமை அளிக்க தொடங்கியது. அதற்கு ஏற்றார் போல மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற  புயல் வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்குள் ஒவ்வொருவராக கால் பதித்தனர். காலம் காலமாக லெப்ட் ஆர்ம் ஸ்பின்னிற்கு புகழ்பெற்ற அந்த அணி விக்கெட் வீழ்த்தக் கூடிய லெக் ஸ்பின்னரான அடில் ரஷீத் மீது தன் பார்வையை திருப்பியது. 


படையப்பா காமெடி : டீம் செலக்சன்


இத்துடன் சேர்த்து பல்வேறு தேசிய இனங்களை சேர்ந்தவர்களும் அந்த அணியின் ஓர் அங்கமாக மாறத் தொடங்கினர். படையப்பா திரைப்பட ரஜினி செந்தில் காமெடி போல. ' மாப்பிள்ளை  இவருதான். ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது ' என்பது போல கேப்டன் இயான் மோர்கன் அயர்லாந்தை பூர்வீகமாக கொண்டவர். ஸ்டோக்ஸ்-ன் தாய்நாடு நியூசிலாந்து. ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர்  கரீபியர்கள். துவக்க வீரர் ஜேசன் ராய்  பிறப்பில் ஒரு தென்னாப்பிரிக்கர். மொயின் அலி, ரஷீத் போன்றோர் பாகிஸ்தானிய வம்சாவளியினர். இப்படி பலதரப்பட்ட தேசிய இனங்களின் ஒருங்கிணைவாக அந்த அணி இருப்பது அதன் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம். வெவ்வேறு பின்னணி கொண்ட ஊழியர்களை உள்ளடக்கிய ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் நிறுவனம்  போல.  ஒரு கூட்டாட்சி தேசியத்தின் சாதகமான அம்சமென இதனைப் புரிந்து கொள்ளலாம். 


அடித்து ஆடு : மோர்கன் ஸ்டைல்



இயான் மோர்கன் அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வந்தார். பிற அணிகளைப் போல ஒரு நட்சித்திர வீரரை மையப்படுத்தி இங்கிலாந்து பேட்டிங்கை அணுகுவதில்லை. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொள்ளலாம். கோலி ஒரு புறம் நங்கூரம் இட்டுக் கொள்ள வேண்டும். அவரை சுற்றி மற்ற வீரர்கள் ஆட வேண்டும். இதுதான் டெம்ப்ளேட். எல்லா முன்னணி அணிகளுக்கும் ஒரு நங்கூர வீரர் உண்டு. பாகிஸ்தானுக்கு பாபர் ஆசம், நியூசிலாந்துக்கு வில்லியம்சன், ஆஸ்திரேலியாவுக்கு ஸ்மித் என்று.




ஆனால் இங்கிலாந்து அணியோ இப்படி எந்த ஒரு நங்கூரத்தையும் நம்பியிருப்பதில்லை. அதன் நட்சித்திர வீரர் ஜோ ரூட்டுக்கு டி20 அணியில் நிரந்தர இடம் கூட கிடையாது. இங்கிலாந்தின் எல்லா வீரர்களும் களமிறங்கிய உடனே அடித்து ஆடக் கூடியவர்கள். மேலும் ஒரு நிரந்தரமான பேட்டிங் ஆர்டர் என்ற ஒன்றும் அந்த அணிக்கு  கிடையாது. யாரும் எந்த இடத்திலும் இறங்கி ஆடலாம் என்கிற ஒரு நெகிழ்வுத் தன்மையை அணியில் மோர்கன் உருவாக்கியுள்ளார். இங்கிலாந்தில் ஒரு திறனை மட்டுமே அடிப்படையாக கொண்ட வீரர்கள் மிகவும் குறைவு. கேப்டன் மோர்கன், டேவிட் மலன் போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே பேட்டிங்கில் மட்டும் பங்களிக்க கூடிய வீரர்கள். பந்து வீச்சாளர்களை எடுத்துக் கொண்டால் மார்க் வுட் மற்றும் ரஷீத் மட்டுமே முழுமையான பந்து வீச்சாளர்கள். மற்ற எல்லாரும் பலதரப்பட்ட திறன் கொண்ட வீரர்கள்.


கூட்டாட்சி தேசியமும் T20 கிரிக்கெட்டும்


இங்கிலாந்து மாடலில் அணியை கட்டுவது என்பது பிற அணிகளுக்கு அத்தனை லேசுபட்ட காரியம் அல்ல. இந்தியாவையே மீண்டும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ரோஹித், ஷ்ரேயாஸ், கோலி, தவண், ராகுல், சூர்ய குமார் யாதவ், ஷமி, பும்ரா என பெரும்பாலும் ஒற்றை திறனை அடிப்படையாக கொண்ட வீரர்களே. ஆல்ரவுண்டர் கணக்கில் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா போன்ற ஒரு சிலரை மட்டுமே சேர்க்க முடியும். இந்திய அணியின் மற்றொரு பலவீனம் டி20 - ஐ  அணுகும் அதன் பழமைவாத அணுகுமுறை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைப் போல முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட இந்திய வீரர்கள் முயசிப்பதில்லை. ஒருநாள் போட்டிகளின் பாணியில் நின்று நிதானித்து நேரமெடுத்த பின்னரே அடிக்க தொடங்குகின்றனர். இந்த கிளாசிக்கல் பாணி ஒருநாள் போட்டிகளில் கூட இப்போது காலாவதி ஆகிவிட்டது. அதற்கும் உபயம் இட்டது இங்கிலாந்து அணிதான்.




இன்னொரு முக்கிய பிரச்சினை மற்ற அணிகளால் இங்கிலாந்தை போல பல் தேசிய இனப் பின்னணி கொண்டவர்களை அணியில் இடம்பெற வைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அணியின் தேவைக்கு ஏற்ப பிற நாட்டை பூர்வீகமாக கொண்ட வீரர்களை இங்கிலாந்து போல பிற நாடுகளால்  இறக்குமதி செய்ய முடியாது. குறிப்பாக இந்தியாவில் கனவில் கூட சாத்தியம் இல்லை. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் மட்டுமே இது ஓரளவு சாத்தியம். மற்ற நாடுகளுக்கு இல்லாத ஒரு சாதகமான அம்சம் இந்தியாவிடம் உள்ளது. இங்கிலாந்தை போல இந்தியா தேவைக்கேற்ற வீரர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காரணம் இந்தியாவே பல்தேசிய இன மக்கள் வாழும் நாடு தான். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தினாலே இங்கிலாந்து மாடலில் ஒரு டி20 அணியை நம்மால் உருவாக்க முடியும். இன்று இங்கிலாந்துக்கு நிகராக டி20 கிரிக்கெட்டில் வெற்றிநடை போடும் அணி வெஸ்ட் இண்டீஸ். அந்த அணியும் கூட அடிப்படையில் பல்வேறு தீவு தேசங்களின் கூட்டமைப்பு என்பதை மறந்து விட முடியாது.