காதல் தம்பதியினரான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சில நாள்களாகக் கூறப்பட்டு வந்தது.


சானியா மிர்சா, ஷோயிப் மாலிக் இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.


இச்சூழலில்  சில வாரங்களுக்கு முன்பு, சானியா மிர்சா “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாஹ்வைக் காண வேண்டும்” எனக் குறிப்பிட்டு தனது மகன் இஷான் புகைப்படத்துடன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். 


சானியா மிர்சாவின் இந்தப் பதிவு, அவரைப் பின்தொடர்பவர்களையும், அவரது ரசிகர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது.  இதனையடுத்து சானியா - ஷோயிப் மாலிக் தம்பதியின் திருமண வாழ்க்கையில் பிரச்னை உருவாகியுள்ளதாகத் தகவல்கள் வலம் வரத் தொடங்கின.


பாகிஸ்தான் நடிகை ஒருவருடன் ஷோயப் மாலிக் தொடர்பில் இருப்பதாகவும் அதனால் சானியா மிர்சாவுக்கும் மாலிக்குக்கும் விவாகரத்தாக உள்ளதாகவும் தவவல்கள் பரவி வந்தன.


இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக  சானியாவின் பிறந்தநாளுக்கு ஷோயப் மாலிக்  வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் முன்னதாகப் பதிவிட்டிருந்தார்.


 






இந்நிலையில் சானியா மிர்சா மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்து தனது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.


தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னைத் தானே நேசிப்பது குறித்து உணர்ச்சிகரமான கவிதை ஒன்றை சானியா பகிர்ந்துள்ளார்.


"நாம் ஒளி மற்றும் இருளால் ஆன ஒரு மனிதர்கள். கொஞ்சம் பலவீனமாக உணர்வதை அனுமதிக்கும் அளவுக்கு நம்மை நேசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.


உங்கள் இதயம் மிகவும் கனமாக இருக்கும் நாள்களில் ஓய்வெடுக்க கற்றுக்கொள்ளுங்கள்” என சானியா பகிர்ந்துள்ளார்.




ஒருபுறம் ஏற்கெனவே சானியா - ஷோயிப் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டதாகத் தகவல்கள் பரவும் நிலையில், தற்போது மீண்டும் சானியாவின் இந்த இன்ஸ்டா பதிவு அவரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.