முன்னாள் மல்யுத்த வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வென்றவருமான சாக்‌ஷி மாலிக், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங்குக்கு மக்களவை தேர்தலில் சீட் கொடுத்ததற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 


மக்களவைத் தேர்தலுக்கான மற்றொரு வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை நேற்று (மே 2) அறிவித்தது. இதில், பிரிஜ் பூஷண் மகன் கரண் பூஷனுக்கு உத்தரபிரதேச மாநிலம் கைசர்கஜ்ச் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கரண் பூஷன் சிங் தற்போது உத்தரபிரதேச மல்யுத்த சங்கத்தின் தலைவராக உள்ளார். முதல் முறையாக மக்களவை தேர்தல் போட்டியிட உள்ளார். இவர் பிரிஜ் பூஷன் சிங்கின் இளைய மகன் ஆவார். கோண்டா மற்றும் கைசர்கஜ்சில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். எனவே, இன்று கரண் சிங் வேட்புமனு தாக்கல் செய்வார் என நம்பப்படுகிறது. 


இதுகுறித்து மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தனது எக்ஸ் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “நாட்டின் மகள்கள் தோற்றனர், பிரிஜ் பூஷன் வென்றார். நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்றுவரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை, நீதியை மட்டுமே கேட்டோம். 


இதுவரை அவர் கைது செய்யாவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால், இன்று அவரது மகனுக்கு ட்டு வழங்கியதன் மூலம், நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை குலைத்துள்ளீர்கள். ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டும் சீட்டு போனால், ஒரு மனிதனின் முன் இந்த நாட்டு அரசு பலவீனமாக உள்ளதா? 


ராமர் மற்றும் ராமர் கோயில் என்ற பெயரில் வாக்குகள் தேவை என்றால் அவர் காட்டிய பாதை என்ன ஆகிறது என்ற கேள்வி எழுகிறது. ” என பதிவிட்டுள்ளார். 


பஜ்ரங் புனியா: 






இதுகுறித்து பஜ்ரங் புனியாவும் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசாங்கத்தை நம்பாதீர்கள், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். பதக்கம் வெல்லும் மகள்களை தெருவில் இழுத்துச் செல்வதும், அவர்களைப் பாலியல் சுரண்டல் செய்தவரின் மகனுக்கு டிக்கெட் கொடுத்து கவுரவிக்கப்படுவதும் நாட்டின் துரதிர்ஷ்டம்” என்று எழுதியிருந்தார். 


கடந்த டிசம்பரில், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக், பிரிஜ் பூஷனின் உதவியாளர் சஞ்சய் சிங் WFI தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேபோல், பஜ்ரஜ் புனியா தனது பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியின் இல்லத்திற்கு வெளியே வைத்துவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.