தமிழ்நாட்டில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயில் உச்சத்தில் உள்ளது. அண்டுதோறும் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் வெப்பநிலை உச்சக்கட்டத்தில் இருக்கும். தற்போதைய நிலவரப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடந்து பதிவாகி வருகிறது.


அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில், கரூர் பரமத்தியில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து, ஈரோட்டில் 44 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 42.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 42 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 42 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் 42.2 டிகிரி செல்சியஸ், திருச்சி 42.7 டிகிரி செல்சியஸ், வேலூர் 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூரில் கடந்த இரண்டு நாட்களாக 44 டிகிரி செல்சியஸ் அதாவது 112 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.


இந்நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ளது. நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் அதாவது மே 28 ஆம் தேதி முடிவடைகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் வெப்பநிலை கொளுத்தும் நிலையில் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.


இதன் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியவர்கள் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள் என்பதால் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவித்தப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எப்போதுமே சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கும் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கூட இந்த ஆண்டு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில், வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருச்சி, திருப்பூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும் நேற்று வேலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததுள்ளது. இனி வரும் நாட்களில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.