இந்த முறை கோப்பை ஆர்சிபி அணிக்குத் தான் என பேப்பரில் எழுதி அதனை விநாயகர் சிலை முன்வைத்து வழிபட்ட ஆர்சிபி ரசிகரின் வீடியோ வைரல்.


ஐபிஎல் சீசன் 18:


ஐபிஎல் சீசன் 17 கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.


ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ஆர்சிபி:


முன்னதாக கடந்த 17 சீசன்கள் ஐபிஎல்லில் ராஜாவாக திகழும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறையும், ஹிட்மேன் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் கோப்பையை வென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரன் மிஷின் விராட் கோலி விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. கடந்த 17 சீசன்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் ஆர்சிபி அணி பூர்த்தி செய்த பாடில்லை. ஆனாலும் ரசிகர்கள் 2025 ஆம் ஆண்டாவது பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


ஈ சாலா கப் நம்தே:


இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் சிலையின் பாதத்தில் ‘ஈ சாலா கப் நம்தே (இந்த ஆண்டு கோப்பை நமதே) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2025’ என்று எழுதப்பட்ட காகிதத்தை ரசிகர் ஒருவர் வைத்து வழிபாடு செய்துள்ளார்.





இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் நகைச்சுவையான கமெண்டுகளை பதிவு செய்தும் வருகின்றனர்.