14-வது ஐ.பி.எல். தொடருக்கான மூன்றாவது ஆட்டம் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் களத்தில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.


வான்கடே மைதானத்தில் சற்றுமுன் போடப்பட்ட டாசில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் வெற்றி பெற்றார். அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட் செய்யுமாறு அழைத்தார்.  இதையடுத்து, பஞ்சாபின் ஆட்டத்தை மயங்க் அகர்வாலும், கே.எல்.ராகுலும் தொடங்கியுள்ளனர்.




பஞ்சாப் அணியில் ஐ.பி.எல். ஆட்டங்களிலே அதிக சிக்ஸர்களை அடித்தவரும், அதிரடி மன்னனுமான ‘யுனிவர்சல் பாஸ்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கிறிஸ் கெயில் களமிறங்க உள்ளார். பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல். ராகுல். நிகோலஸ் பூரன், மயங்க் அகர்வால் என்று அதிரடி வீரர்களின் பட்டாளமே உள்ளனர். ராஜஸ்தான் அணியிலும் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ரியான் பராக், ஷிவம் துபே, ராகுல் திவேதியா ஆகிய அதிரடி வீரர்களுடன் களமிறங்கவுள்ளனர். பந்துவீச்சிலும் லிவிங்ஸ்டன், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனத்கட், கார்த்திக் தியாகி ஆகியோர் அசத்த தயாராக உள்ளனர்.




இதுவரை கோப்பையே கைப்பற்றாத பஞ்சாப் அணியும், முதல் ஐ.பி.எல்லுக்கு பிறகு ஐ.பி.எல். கோப்பையையே கைப்பற்றாத ராஜஸ்தான் அணியும் மோதும் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்க முனைப்புடன் களமறிங்கியுள்ளனர். அந்த அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளனர்.