Pro Kabaddi 2022: Pro Kabaddi 2022: ப்ரோ கபடி லீக்கில் நேற்று நடந்த போட்டியில் பெங்கால் அணியும், டெல்லி  அணியும் வெற்றி பெற்றன. இந்த தொடரில் இன்னும் தோல்வியைச் சந்திக்காத டெல்லி அணி டேபிள் டாப்பராக உள்ளது.  இரண்டாவது இடத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியும் உள்ளன. 


 இந்திய கபடி ரசிகர்களுக்கு பெரிய விருந்து அளிக்கும் ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் கடந்த வெள்ளிக் கிழமை (07/10/2022) தொடங்கியது. 12 அணிகள் களமிறங்கிய இந்தத் தொடர் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர்.


பெங்களூரு புல்ஸ் vs பெங்கால் வாரியர்ஸ்


இந்த சீசனில் நேற்று இரண்டு போட்டிகள் நடந்தது. முதலில் மாலை 7.30 மணிக்கு நடந்த முதல்  போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. மிகவும் பலமான அணிகள் மோதிக் கொள்வதால் போட்டி மிகவும் பரபரப்பாக போகும் என எதிர்பார்க்கப்பட்டது. போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பெங்கால் வாரியர்ஸ் அணி  9 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 33 புள்ளிகளும் பெங்கால் அணி 42 புள்ளிகளும் எடுத்திருந்தது. 



 


யு.பி யோதாஸ் vs டெல்லி தபாங்


நேற்று நடந்த மற்றொரு போட்டியில் யு.பி யோதாஸ் அணியும் டெல்லி தபாங் அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் சரிசமமான புள்ளிகளிலே இருந்து வந்தன. இதனால் யார் போட்டியின் வெற்றியாளராக வருவர் என்பதே பெரும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மிகவும் சுவாரஸ்யமாக நடந்த போட்டியின் இறுதியில் யு.பி யோதாஸ் அணியும் டெல்லி தபாங் அணியும் 42 - 44 எனும் புள்ளிகள் பெற்று இருந்தன. இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி தபாங் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் டெல்லி அணி இந்த சீசனில் இன்னும் தோல்வியைச் சந்திக்காத அணியாக உள்ளது. மேலும், டேபிள் டாப்பராகவும் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொண்டது.