இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உள்ளிட்ட 8 பேர் மீது செக் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிர்ச்சியில் ரசிகர்கள்:


இந்த ஆண்டுக்கான 15வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி கடந்த 29ம் தேதி முடிவடைந்தது. கடந்த ஆண்டு கோப்பையைக் கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில், தோனியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


நீதிமன்றத்தில் வழக்கு:


எஸ்கே எண்டர்ப்ரைசஸ் என்ற நிறுவனம் தான் தோனியின் மீது வழக்குத் தொடர்திருக்கிறது. இந்த நிறுவனம் பீகாரின் பெகுசாராய் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளது. அந்த மனுவில், தங்கள் நிறுவனம் நியூ க்ளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா நிறுவனத்திடமிருந்து ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலையைப் பெற்றதாகவும், ஆனால், அந்நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் அந்த பணம் இல்லை என்று கூறியுள்ளது.


மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள தோனி அந்த பொருளுக்கு விளம்பரம் செய்திருந்தார். அதனால், இந்த வழக்கில் தோனியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.





டிஎன்ஏ இந்தியா செய்தியில் வந்துள்ள தகவலின் படி, நியூ க்ளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான உரங்களை வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த நிறுவனமும் தயாரிப்பை வழங்கியது. ஆனால் விற்பனையாளர் வழங்குநருடன் இணங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் பெரிய அளவிலான உரங்கள் விற்கப்படாமல் தேக்கமடைந்தது. இதனையடுத்து,  மீதியுள்ள உரத்தை நியூ க்ளோபல் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதற்குப் பதிலாக ரூ.30 லட்சம் மதிப்பிலான காசோலையை ஏஜென்சிக்கு வழங்கியது. ஆனால் அந்த காசோலையை வங்கியில் டெப்பாசிட் செய்ய முயற்சி செய்தபோது வங்கியில் பணமில்லை என்பது தெரிய வந்தது.


தோனி மீது வழக்கு:


இதனையடுத்து, அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது எஸ்கே எண்டர்ப்ரைசஸ் நிறுவனம். ஆனால் நியூ க்ளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா நிறுவனத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால், எஸ்கே எண்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளரான நீரஜ் குமார் நிராலா, அந்த நிறுவனத்தை விளம்பரப்படுத்திய தோனி உள்பட 8 பேர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.





வழக்கு ஒத்தி வைப்பு:


இந்த வழக்கு நேற்று பெகுசாராய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதனை அஜய் குமார் மிஷ்ரா அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கானது ஜூன் 28ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.