டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் காம்பவுண்ட் பிரிவு கலப்பு வில்வித்தை போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இந்தியா சார்பில் ராகேஷ் குமார் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் பங்கேற்றனர். காம்பவுண்ட் கலப்பு பிரிவு வில்வித்தை பொறுத்தவரை மொத்தம் 16 முறை ஒரு அணி வில்வித்தை செய்ய வேண்டும். அதில் அதிகமாக புள்ளிகள் எடுக்கும் அணி வெற்றி பெறும். 


இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ராகேஷ் குமார் மற்றும் ஜோதி தாய்லாந்து நாட்டின் பார்பரோன் மற்றும் அனோன் இணையை எதிர்கொண்டது. இதில் முதல் நான்கு அம்புகளின் முடிவில் இரு அணிகளும் தலா 35 புள்ளிகள் பெற்று சமமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து அடுத்த நான்கு அம்புகள் வில்வித்தை செய்த பிறகு 72-71 என்ற கணக்கில் தாய்லாந்து அணி சற்று முன்னிலை பெற்றது. 


 






இதைத் தொடர்ந்து அடுத்த நான்கு அம்புகளின் முடிவில் இந்திய அணி 109-108 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் கடைசி நான்கு அம்புகள்  யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்தது. இதில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இறுதியில் இந்தப் போட்டியை இந்திய அணி 147-141 என்ற கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. காலிறுதிப் போட்டியில் இந்திய அணி துருக்கி அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 2.40 மணிக்கு தொடங்க உள்ளது. 


 






முன்னதாக இன்று காலை காம்பவுண்ட் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் ஜோதி பங்கேற்றார். இவர் அயர்லாந்து வீராங்கனை லூயிஸை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் தொடக்கத்தில் சற்று நன்றாக வில்வித்தை செய்த ஜோதி பின்னர் சற்று தடுமாறினார். இந்தப் போட்டியின் இறுதியில் 137 புள்ளிகள் மட்டுமே பெற்றார். அயர்லாந்து வீராங்கனை லூயிஸ் 141 புள்ளிகள் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தையில்  ஜோதி வெளியேறினார்.


மேலும் படிக்க: டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: தேசிய விளையாட்டு தினமான இன்று, இந்தியாவுக்கான முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்றார் பவினா..!