டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தடகள போட்டிகள் இன்று தொடங்கின. முதல் நாளான இன்று மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் டூட்டி சந்த் பங்கேற்றார். அவர் 100 மீட்டர் முதல் சுற்றில் 5ஆவது ஹீட்ஸ் பிரிவில் ஓடினார். ஒவ்வொரு ஹீட்ஸ் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுடம் மற்றவர்களில் இருந்து சிறப்பான முதல் 3 நேரங்களை வைத்துள்ள வீராங்கனைகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். 


இந்நிலையில் டூட்டி சந்த்  பந்தைய தூரத்தை 11.54 நேரத்தில் கடந்து தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் 7ஆவது இடத்தை பிடித்தார். இது அவரின் சொந்த சிறப்பான நேரமான 11.17 விநாடிகள் என்பதை விட மிகவும் அதிகமான ஒன்றாகும். இதனால் மகளிர் 100 மீட்டர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை டூட்டி சந்த் இழந்தார். அத்துடன் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். தடகளத்தில் இன்று காலை முதல் சுற்றுடன் வெளியேறும் மூன்றாவது இந்தியர் டூட்டி சந்து ஆவார்.  எனினும் டூட்டி சந்த் அடுத்து மகளிர் 200 மீட்டர் ஓட்ட பந்தையத்தில் பங்கேற்க உள்ளார். 






முன்னதாக காலையில் நடைபெற்ற 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். அதில் இரண்டாவது ஹீட்ஸ் பிரிவில் இவர் ஓடினார். தொடக்கத்தில் சற்று சிறப்பாக ஓடிய அவினாஷ் சேபிள் இறுதி வரை அதை தக்க வைக்க முயற்சி செய்தார். இறுதியில் பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். அத்துடன் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.  


அதைத் தொடர்ந்து ஆடவர் 400 மீட்டர் தடை ஓடத்தில் இந்தியாவின் எம்.பி.ஜபீர் பங்கேற்றார்.  இவர் 5ஆவது ஹீட்ஸில் ஓடினார். இந்தச் சுற்றில் அவர் பந்தைய தூரத்தை 50.77  நேரத்தில் கடந்து  7ஆவது இடத்தை பிடித்தார். ஒவ்வொரு ஹீட்ஸ் பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுடன் மொத்தமாக ஹீட்ஸ் பிரிவில் சிறப்பான நேரத்தை வைத்திருக்கும் அடுத்த 4 பேரும் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.  அந்தவகையில் தன்னுடைய ஹீட்ஸ் சுற்றில் கடைசி இடத்தை பிடித்ததன் மூலம் முதல் சுற்றுடன் எம்.பி.ஜபீர் வெளியேறியுள்ளார். அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். 


மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லோவ்லினா பார்கோயின் !