டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில் கலப்பு மற்றும் குழு  போட்டிகள் முடிவடைந்தன. அதன்பின்னர் நேற்று ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு தனி நபர் போட்டிகள் தொடங்கின. நேற்று ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எலிசன் ப்ராடியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு இந்திய வீரர் தருண்தீப் ராய் இஸ்ரேல் வீரர் இடேவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.  இன்று ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ் பங்கேற்றார். அவர் முதல் சுற்றில் சீன தைபே அணியின் செங்கை எதிர்த்து விளையாடினார். அதில் 6-4 என்ற கணக்கில் அடானு தாஸ் வென்றார்.


இந்நிலையில் இரண்டாவது சுற்றில் அடானு தாஸ் தென்கொரிய வீரர் ஜின்ஹெக்கை எதிர்த்து விளையாடினார்.  அதில் முதல் செட்டை 26-25 என்ற கணக்கில் ஜின்ஹெக் வென்றார். அத்துடன் 2-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் இரு வீரர்களும் தலா 27 புள்ளிகள் எடுத்தனர். இதனால் இருவருக்கும் ஒரு செட் புள்ளி வழங்கப்பட்டது. தென்கொரிய வீரர் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். மூன்றாவது செட்டிலும் இரு வீரர்களும் மீண்டும் 27 புள்ளிகள் பெற்று சம நிலையில் இருந்தனர். இதனால் தென்கொரியா வீரர் 4-2 என முன்னிலை பெற்றார். நான்காவது செட்டில் அடானு தாஸ் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட அடானு 27 -22 என்ற கணக்கில் வென்றார். இதனால் 4-4 என இருவரும் சமநிலையில் இருந்தனர்.


 






ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்க ஐந்தாவது மற்றும் கடைசி செட் நடைபெற்றது. அதில், இருவரும் தலா 28 புள்ளிகள் பெற்றனர். இதனால் 5-5 என்ற கணக்கில் இருவரும் சமமாக இருந்தனர். எனவே வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் ஆஃப் முறை பயன்படுத்தப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட அடானு தாஸ் 10 புள்ளிகள் எடுத்து வென்றார். இதன்மூலம் உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தென்கொரிய வீரரை வீழ்த்தி அடானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 


முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவு வில்வித்தையில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி பங்கேற்றார். அவர் முதல் சுற்றில்  பூட்டான் நாட்டின் கர்மாவை 6-0 என வீழ்த்தினார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் தீபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிஃபரை எதிர்த்து விளையாடினார். அதில் 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி முன்னேறி அசத்தினார்.  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நாளை அமெரிக்காவின் மெக்கென்சியை எதிர்த்து விளையாடுகிறார். 


ஆடவர் குழுப் பிரிவில் இந்திய அணி 6-0 என்ற கணக்கில் தென்கொரிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியது. அதேபோல் கலப்பு பிரிவில் பிரவீன் ஜாதவ் மற்றும் தீபிகா குமாரி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி : நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் !