டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று முதல் தடகள போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளான இன்று 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். அதில் இரண்டாவது ஹீட்ஸ் பிரிவில் இவர் ஓடினார். தொடக்கத்தில் சற்று சிறப்பாக ஓடிய அவினாஷ் சேபிள் இறுதி வரை அதை தக்க வைக்க முயற்சி செய்தார். இறுதியில் பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். அத்துடன் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.

  


இதனைத் தொடர்ந்து ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் எம்.பி.ஜபீர் பங்கேற்றார். இவர் 5ஆவது ஹீட்ஸில் ஓடினார். இந்தச் சுற்றில் அவர் பந்தைய தூரத்தை 50.77  நேரத்தில் கடந்து  7ஆவது இடத்தை பிடித்தார். ஒவ்வொரு ஹீட்ஸ் பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுடன் மொத்தமாக ஹீட்ஸ் பிரிவில் சிறப்பான நேரத்தை வைத்திருக்கும் அடுத்த 4 பேரும் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.  அந்தவகையில் தன்னுடைய ஹீட்ஸ் சுற்றில் கடைசி இடத்தை பிடித்ததன் மூலம் முதல் சுற்றுடன் எம்.பி.ஜபீர் வெளியேறியுள்ளார். அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். 


 






இவர் தன்னுடைய சொந்த சிறப்பான நேரமான 49.13 என்பதைவிட மிகவும் அதிகமான நேரத்தில் ஓடினார். இதனால் அரையிறுதிக்கு முன்னேறாமல் பெரியளவில் ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக இன்று காலை நடைபெறும் மகளிர் 100 மீட்டர் முதல் சுற்றில் இந்தியாவின் டூட்டி சந்த் பங்கேற்க உள்ளார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை காலை 8.45 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் இன்று மாலை 4.42 மணிக்கு நடைபெற உள்ள 4*400 மீட்டர் கலப்பு பிரிவு ரிலேவில் இந்தியாவின் சர்தக் பாம்ப்ரி, அலெக்ஸ் ஆண்டனி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 


மேலும் படிக்க: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் மனு பாக்கர், ராஹி சர்னோபட் ஏமாற்றம் !