டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள 5 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.


பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் 2021 தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.




தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்கள், ஒலிம்பிக் 4*400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளனர். கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ரேவதி வீரமணி, தனலெட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோரும், ஆண்கள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு ஊக்கத் தொகை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும், ஊக்கத்தொகைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.


அந்த வகையில் ஜப்பான் டோக்கியோவில் 23-7-2021 முதல் 8-8 2021 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். ஆரோக்கிய ராஜீவ் மற்றும் திரு நாகநாதன் பாண்டி மற்றும் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்புப் பிரிவில் சுபா வெங்கடேசன் செல்வி தனலஷ்மி சேகர் மற்றும் செல்வி. ரேவதி வீரமணி என மொத்தம் 5 தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 5 லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.


இவ்வீரர்களில் எஸ். ஆரோக்கிய ராஜீவ் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், சுபா வெங்கடேசன் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய உயரிய திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவார்கள். 




ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா ரூபாய் 5 இலட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 30 இலட்சம் அரசின் சிறப்பு ஊக்கத்தொகையினை கடந்த 26-6-2021 அன்றும் மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சி.ஏ. பவானி தேவி அவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் சிறப்பு ஊக்கத் தொகையினை 20-6-2021 அன்றும் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.