Paris Paralympics: பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவிற்கு மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.


சரித்திரம் படைத்த பிரீத்தி பால்:


பாராலிம்பிக் போடிகள் பாரிஸில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில்,  இந்திய வீரர், வீராங்கனைகளும் பதக்க வேட்டைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற, மகளிருக்கான 200 மீட்டர் டி-35 ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலம் வென்று அசத்தினார். பந்தய தூரத்தை 30.01 விநாடிகளில் எட்டியதன் மூலம், தனது தனிப்பட்ட புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். இதன் மூலம், பாராலிம்பிக் அல்லது ஒலிம்பிக்கில், டிராக் & ஃபீல்ட் போட்டியில், 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் தடகள விராங்கனை என்ற வரலாற்றுச் சிறப்பை பிரீத்தி பால் பெற்றுள்ளார். முன்னதாக மகளிருக்கான டி35 100மீ ஓட்டப் பந்தயத்திலும் பிரீத்தி பால் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. இவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


வெள்ளி வென்ற நிஷாத் குமார்:


இதனிடயே, ஆடவருக்கான டி47 உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி வென்று அசத்தினார். 2.04 மீட்டர் உயரம் தாண்டி தனது பதக்கத்தை பெற்றுள்ளார். முன்னதாக கடந்த டோக்கியோவ்ல் நடைபெற்ற பாராலிம்பிக்கிலும், நிஷாத் குமார் வெள்ளி வென்றது குற்ப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சேர்ந்த டவுன்செண்ட் ராபர்ட்ஸ் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். 


இதனிடையே, நேற்று நடபெற்ற மகளிருக்கான WS4 பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பவின்பென் படேல் வெற்றி பெற்றார். மெக்சிகோவின் மார்த்தா வெர்டினை, 11-3, 11-7=6, 11-7 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். 


பதக்கப் பட்டியல் நிலவரம்:


இதன் மூலம், இந்தியா தற்போது வரை பாரிஸ் பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 7 பதங்களுடன், 27வது இடத்தில் உள்ளது. சீனா 33 தங்கம் உட்பட 71 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 23 தங்கம் உட்பட 43 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், 8 தங்கம் உட்பட 27 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.