பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் இந்த போட்டித் தொடரில் பங்கேற்று ஆடி வருகின்றனர். இதில் பராகுவே நாட்டைச் சேர்ந்த லுவானா அலோன்சோ என்ற நீச்சல் வீராங்கனையும் பங்கேற்றார்.


பாதியிலே வெளியேற்றப்பட்ட நீச்சல் வீராங்கனை:


ஆனால், இவர் மிகவும் அழகாக இருப்பதாகவும் அவரது அழகு காரணமாக அவரது அணியின் சக வீரர்கள் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவதாகவும், இதன் காரணமாக இவரை மீண்டும் அவரது நாட்டிற்கே திரும்பிச் செல்லுமாறு பராகுவே அணியின் மேலாளர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சோ ஒலிம்பிக்கில் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க தகுதி பெற இயலவில்லை. அவர் தோல்வியடைந்ததால் அவரால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கை பொறுத்தவரை வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஒலிம்பிக் தொடர் தொடங்கியது முதல் போட்டியின் கடைசிநாள் விழா வரை வீரர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவது வழக்கம்.


அழகாக இருந்தது காரணமா?


ஆனால், பராகுவே வீராங்கனை அலோன்சோ இறுதிப்போட்டிக்கு முன்னேறாத நிலையில், அவர் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறி நாடு திரும்புமாறு அவரது அணியின் மேலாளர் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து தங்கியிருப்புத அவரது நாட்டு வீரர்கள் மத்தியில் பாதிப்பையும், கவனச்சிதறலையும் ஏற்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேசமயம், அவர் சக வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த தகவல் தற்போது ஒலிம்பிக் கிராமம் முழுக்க காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அவரை ஒலிம்பிக் கிராமத்தைவிட்டு பராகுவே அணியின் மேலாளர் வெளியேறி சொந்த நாட்டிற்குத் திரும்புமாறு கூறியது உண்மை என்பதை மட்டும் ஆங்கில ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. ஆனால், அதற்கு அவர் அழகாக இருப்பதால் வீரர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதுதான் காரணமா? என்பதை உறுதி செய்யவில்லை. ஆனால், அவரது நடவடிக்கைகள் அணியின் சக வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அந்த அணி மேலாளர் கூறியிருப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


அலோன்சோ சொன்னது என்ன?


இந்த அதிர்ச்சிகர தகவலுடன் சேர்ந்து மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் பராகுவே வீராங்கனை அலோன்சா சொந்த நாட்டிற்கு திரும்பியதும் நீச்சலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விதிமீறலாக, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு வீராங்கனை அலோன்சோ விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் தான் எப்போதும், எங்கிருந்தும் நீக்கப்படவில்லை. தவறான தகவல் பரப்புவதை நிறுத்துங்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தான் எந்த விளக்கமும் கொடுக்க விரும்பவில்லை என்றும், பொய்கள் தன்னை பாதிக்க விட மாட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார்.


ஒலிம்பிக் தொடரில் வீரர்கள் கவனத்தை திசைதிருப்பும் விதமாக நடந்து கொண்ட காரணத்திற்காக சொந்த நாட்டு வீராங்கனையே பராகுவே அணி நிர்வாகம் திருப்பிய அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஒலிம்பிக்கில் ஏற்படுத்தியுள்ளது.