பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், யாருமே எதிர்பார்க்காத வகையில் போட்டி பிரிவுக்குரிய எடைப்பிரிவான 50 கிலோவை காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோடிக்கணக்கான இதயங்களை வென்ற வினேஷ் போகத்:


கடந்த ஓராண்டுகளாக வினேஷ் போகத் பல்வேறு நெருக்கடிகளையும், இடர்களையும் சந்ததித்து வந்தார். அவர் இன்று ஒலிம்பிக் பதக்கத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாத இந்த காரணத்திற்காக வெல்ல முடியாமல் போனாலும், கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளார்.


கடந்த ஓராண்டு காலமாக அவர் கடந்து வந்த சிக்கல்களை நாம் காணலாம். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. பிரிஜ்பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரத்திற்கு பிறகு பல நெருக்கடிகளை இந்திய மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் எதிர்கொண்டவர்.


ஓராண்டில் கடந்து வந்த பாதை:



  • கடந்தாண்டு ஜனவரி மாதம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கூறி பிரிஜ்பூஷனுக்கு எதிராக இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோர் ஈடுபட்டனர்.

  • கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரிஷ்பூஷனுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால் ஸ்வீடனில் நடந்த பயிற்சிக்கு வினேஷ் போகத் செல்லவில்லை.

  • கடந்தாண்டு மே மாதம் நாட்டின் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. அன்று பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் பேரணி நடத்தினர். அதில் வினேஷ்போகத் பங்கேற்றார். அவர் மீது எஃப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  • பிரிஜ் பூஷனுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய நிலையில், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

  • ஒலிம்பிக் தொடர் தொடங்க ஒரு வருடத்திற்கு குறைவான காலமே இருந்த சூழலில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வினேஷ் போகத்திற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

  • கடந்தாண்டு இறுதியில் காயத்தில் இருந்து மீண்ட வினேஷ் போகத், கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என்று ஆவேசமாக கூறினார்.

  • இந்தாண்டு பிப்ரவரி மாதம் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. அதில் 55 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.

  • கடந்த ஏப்ரல் மாதம் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் லாரா என்ற வீராங்கனையை வீழ்த்தி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

  • இந்த ஒலிம்பிக் தொடரில் ஜாம்பவான் வீராங்கனைகளான ஜப்பான் வீராங்கனை கசாகி, உக்ரைன் வீராங்கனை, கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

  • இன்று 50 கிலோ எடைப்பிரிவில் 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இந்த ஒலிம்பிக் தொடரில் வினேஷ் போகத் அளவிற்கு மிகப்பெரிய இடர்களையும், துயரங்களையும் சந்தித்து எந்த வீராங்கனையும் பங்கேற்றிருக்க மாட்டார். ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர்களில் விதிகள் கடுமையாக கடைபிடிக்கக்கூடியது என்றாலும், இந்த விதிக்காக அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளவே இயலாத ஒன்றாகவே கருதப்படுகிறது.


இந்தியாவின் தங்கமகள்:


குறிப்பாக, பெரும்பான்மையாக கடந்த முறை ஆட்சியில் இருந்த மத்திய அரசை எதிர்த்து எம்.பி.யாக பதவி வகித்தவர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக துணிச்சலாக கடந்த ஓராண்டாக போராடியவர் வினேஷ் போகத். இவரது மிக கடுமையான போராட்டத்தையும், சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போராட்டத்தை ஒட்டுமொத்த நாடே அறியும்.


தங்கம் வென்றால்தான் வீரனோ, வீராங்கனையோ என்பது அல்ல. ஒரு விளையாட்டு வீரர்/வீராங்கனை போட்டிகளில் பங்கேற்கும்போதே அவரது திறமை பாராட்டுதலுக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. இத்தனை இடர்களையும் கடந்து இறுதிப்போட்டி வரை வென்ற வினேஷ் போகத் இந்தியாவின் வரலாற்றுப் பக்கத்தில் என்றுமே தங்கமகளாகவே ரசிகர்களால் கொண்டாடப்படுவார்.


ஒலிம்பிக் அவரை நிராகரித்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை நாட்டின் தங்கமகளாகவே சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறது. அத்தனை தடைகளையும் உடைத்து இந்த ஒலிம்பிக்கின் இறுதிவரை சென்ற வினேஷ் போகத்திற்கு ஏபிபி நாடுவின் மனதார வாழ்த்துகளும், பாராட்டுகளும்.