வருடம் 1985, தனது 18 வயதில் முதல் சர்வதேச பாக்சிங் மேடை ஏறுகிறான் அந்த இளைஞன். எதிராளி போர்டாரிக்கோவின் ஹெக்டர் மெர்சிடிஸுக்கு அது நான்காவது மேட்ச். போட்டி தொடங்குகிறது, சீனியர் என்றும் பாராமல் ஹெக்டரின் மீது கருணையின்றிச் சீறிப் பாய்ந்தது அந்த இளைஞனின் குத்துகள். முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்றான் அந்த இளைஞன். அதற்குப் பிறகான ஒவ்வொரு குத்துச்சண்டை போட்டியிலும் எதிராளிகள் நாக் அவுட் ஆவது அவன் மேடையேறும் போட்டிகளின் எழுதப்படாத விதியானது.
இப்படியாக ஐம்பது மேடைகளை வெறிகொண்டுப் பந்தாடிய அந்த வேங்கையின் பெயர் மைக் டைசன். மரண அடி மைக் டைசன் குத்துச்சண்டை மேடைகளின் கெட்ட மனிதரானது இப்படித்தான். 12 வயதில் பிக்பாக்கெட், கொள்ளை, அடிதடி, போதை என பட்டியலில் உள்ள குற்றங்கள் அத்தனையும் செய்து ஐம்பது முறைக்கு மேல் கைது செய்யப்பட்டு சின்னபின்னமாகி சீர்திருத்தப் பள்ளியில் கிடந்த சிறுவன் டைசனை குத்துச்சண்டை மேடைக்கு அழைத்து வந்தார் சக வீரர் பாபி ஸ்டீவார்ட்.
முழுக்க முழுக்க தவறுகளால் மட்டுமே தன் வாழ்க்கையை எழுதிவந்த டைசன் தற்போது தன்னை போன்று இளவயதைத் தொலைத்த இளைஞர்களை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது முகத்தின் இடதுபக்கத்தில் உள்ள வாரியர் டாட்டூதான் டைசனின் அடையாளம். கடவுள் பாதி மிருகம் பாதி எனத் தனக்குள் இருக்கும் சாத்தானுக்கும் தேவனுக்கும் இடையே விடாப்பிடியாகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் வாழ்நாள் சாம்பியன் தான் இந்த மைக் டைசன். Also Read : ”காவலர்கள் மனித உரிமை மீறாத வகையில் நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்படும்” - டிஜிபி சைலேந்திரபாபு