மாரத்தான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஓட்டப்பந்தய வீரர் கெல்வின் கார் விபத்தில் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்தும் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பிரபலமான வீரராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடந்த சிகாகோ மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். சுமார் 42.19 கிலோ மீட்டர் கொண்ட பந்தய தூரத்தை 2 மணி நேரம் 35 விநாடிகள் கடந்து உலக சாதனைப் படைத்தார் கெல்வின். அதுமட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற வலன்சியா மாரத்தான் போட்டி மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த லண்டன் மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்ற்று அவர் முதலிடம் பிடித்தார். 


இதனிடையே நடப்பாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு கெல்வின் கிப்தும் தயாராகி வந்தார். 24 வயதான இவர் இந்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த போட்டியில் பந்தய இலக்கை 2 மணி நேரத்தில் கடக்க தேவையான பயிற்சிகளையும் கெல்வின் எடுத்து வந்தார். இந்த நிலையில் மேற்கு கென்யாவில் நேற்று முன்தினம் இரவு பயிற்சி முடித்து விட்டு வழக்கம்போல மாரத்தான் வீரர் கெல்வின் கிப்தும் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் பயிற்சியாளர் ருவாண்டாவைச் சேர்ந்த கெர்வாஸ் ஹகிசிமானா மற்றும் இளம்பெண் ஒருவர் இருந்துள்ளனர். 


3 பேரும் காரில் இருந்த நிலையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விபத்தை தவிர்க்க கெல்வின் முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. சாலையில் இருந்து விலகிய கார் அருகிலிருந்த கால்வாய்க்குள் இறங்கி பின் அங்கிருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சின்னபின்னமாக நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே மாரத்தான் வீரர் கெல்வின் மற்றும் பயிற்சியாளர் கெர்வாஸ் இருவரும் உயிரிழந்தார்கள். இளம்பெண் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


உலக சாதனைப் படைத்த மாரத்தான் வீரர் கெல்வின் கிப்துமின் மரண செய்தி ஒட்டுமொத்த கென்யா மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூடோ, உலக தடகள சங்கத் தலைவர் செபாஸ்டியன் கோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் உலகளவில் விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்களும் கெல்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 




மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவேஷ் கானை நீக்கியது ஏன்? ஆகாஷ் சோப்ரா கேள்வி!