ஒடிசாவின் புபனேஷ்வரின் ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியாவும் ஜெர்மனியும் மோதியிருந்தன. இதில் ஜெர்னி 4-2 என இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.


இந்தியா இந்த தொடரில் இதுவரை நன்றாகவே ஆடியிருந்தது. முதல் போட்டியில் ஃப்ரான்ஸிற்கு எதிராக 4-5 என தோற்றிருந்தது. ஆனால், அந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து கனடா மற்றும் போலந்து நாடுகளுக்கு எதிராக 13-1 மற்றும் 8-2 என பெரிய வெற்றிகளை பெற்றிருந்தது. காலிறுதி போட்டியில் வலுவான பெல்ஜியம் அணியை 1-0 என வீழ்த்தியிருந்தது. இந்நிலையிலேயே ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 2-4 என மோசமாக தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்திருக்கிறது.


முதல் கால் பகுதியிலிருந்தே ஜெர்மனி அணியே இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. முதல் 5 நிமிடங்களிலேயே ஒரு ஃபீல்ட் கோல் வாய்ப்பையும் ஒரு பெனால்டி வாய்ப்பையும் ஜெர்மனி பெற்றது. இரண்டுமே சரியாக ஃபினிஷ் ஆகவில்லை. ஆனால், முதல் கால்பகுதி முடியப்போகிற தருவாயில் ஜெர்மனிக்கு இன்னொரு பெனால்டி வாய்ப்பும் கிடைத்தது. இதை அந்த அணி மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டு கோலாக்கிவிட்டது. இதன்மூலம் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது.






இரண்டாம் கால்பகுதியில் போட்டி இன்னும் பரபரப்பானது. ஜெர்மனி கோல் மழை பொழிந்தது. ஒரு ஃபீல்ட் கோல், ஒரு பெனால்டி கார்னர், ஒரு பெனால்ட் சூட் என மூன்றுவிதமாகவும் கோலடித்து கலக்கியது. இதே கால்பகுதியில் இந்தியா சார்பில் உத்தம் சிங்கும் ஒரு கோலை அடித்துக் கொடுத்தார். பாதி நேரம் முடிவடைந்த போது 4-1 என ஆட்டம் முழுக்க முழுக்க ஜெர்மனி பக்கமே இருந்தது. இன்னும் 30 நிமிடங்கள் எஞ்சியிருந்தது. அதற்குள் இந்தியா மேற்கொண்டு கோல்களை வழங்காமல் 3 கோல்களை அடித்தால்தான் போட்டி சமனாகும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இதை இந்திய அணியால் செய்ய முடியவில்லை.


மூன்றாம் கால்பகுதி முழுவதும் கோல் இல்லாமல் போனது. நான்காம் கால்பகுதியிலும் ஜெர்மனியே ஆதிக்கம் செலுத்தி அட்டாக் செய்து கொண்டிருந்தது. கடைசியாக போட்டி முடிவதற்கு 1 நிமிடம் இருக்கையில் இந்திய அணிக்காக பாபி ஒரு கோலை அடித்துக் கொடுத்தார். ஆனால், இது ஆறுதல் கோலாக மட்டுமே அமைந்தது. இதனால் போட்டியின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ஜெர்மனி 4-2 என சிறப்பான வெற்றியை பெற்றது. நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.


வலுவான பெல்ஜியமுக்கு எதிரான காலிறுதி போட்டியில் இந்தியா 39 நிமிடங்களுக்கு ஒரு கோலை வைத்துக் கொண்டு டிஃபண்ட் செய்திருந்தது. ஆனால், இந்த போட்டியில் ஜெர்மனியை முதல் அரைமணி நேரத்திலேயே 4 கோல்கள் அடிக்கவிட்டது. இந்தியாவின் டிஃபன்ஸ் ரொம்பவே மோசமாக இருந்தது. இந்தியாவின் பலமான கவுண்டர் அட்டாக்கும் இந்த போட்டியில் சரியாக அமையவில்லை. இவையெல்லாம் சேர்ந்து இந்திய அணிக்கு முக்கியமான போட்டியில் தோல்வியை ஏற்படுத்திவிட்டது.