2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதனால் புதிதாக வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது இருக்கும் 8 ஐபிஎல் அணிகளுக்கும் 4 வீரர்கள் வரை தக்கவைத்து கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் புதிதாக வந்துள்ள இரண்டு அணிகளும் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆகவே தற்போது உள்ள 8 அணிகளும் தங்களுடைய அணியில் தக்கவைத்து கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை வரும் 30ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இதனால் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுடைய வீரர்கள் தக்கவைத்து கொள்ளும் பணியில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் எந்தெந்த வீரர்களை அந்த அணிகள் தக்கவைக்க வாய்ப்பு உள்ளது? இதுதொடர்பாக ஆங்கில விளையாட்டு தளம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி விவரம்:


 


சென்னை சூப்பர் கிங்ஸ்:




சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணி சார்பில் 4 பேர் தக்கவைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தோனி,ஜடேஜா, டூபிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை அந்த அணி தக்கவைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அனுபவ வீரர் பிராவோவை சென்னை அணி இம்முறை தக்கவைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது. 


பஞ்சாப் கிங்ஸ்:




பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுலை தக்கவைக்க ஆர்வம் காட்டவில்ல என்று கூறப்படுகிறது. அந்த அணி சார்பில் வெறும் 2 வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. மாயங்க் அகர்வால், ரவி பிஷ்னாய், ஷாரூக் கான் ஆகிய மூவரில் இருவர் தக்கவைக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் யாரையும் தக்கவைக்க வேண்டாம் என்ற முடிவை எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 


 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:




ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் நிச்சயமாக விராட் கோலி மற்றும் மேக்ஸ்வேல் ஆகிய இருவரும் தக்கவைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அவர்களுடன் தேவ்தத் படிக்கல், சாஹல் மற்றும் ஸம்பா ஆகிய மூவரில் இருவர் தக்கவைக்கப்படலாம் என்று தெரிகிறது. டிவில்லியர்ஸ் கிரிக்கெட் விளையாட்டுகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளதால் மேக்ஸ்வேல் நிச்சயம் தக்கவைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. 


 


டெல்லி கேபிடல்ஸ்:




டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பண்ட்,ஷிகார் தவான், பிருத்வி ஷா மற்றும் நார்கே ஆகிய நான்கு பேர் தக்கவைக்கபட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரையும் அந்த அணி தக்கவைக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. 


 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:




கொல்கத்தா அணியில் புதிதாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் அடுத்த தொடருக்கு தக்கவைக்கப்படுவார் என்று கருதப்படுகிறது. அவருடன் சேர்ந்து வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரே ரஸல் அல்லது சுனில் நரேன் ஆகியோர் தக்கவைக்கபடலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. 


 


ராஜஸ்தான் ராயல்ஸ்:




ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணி இரண்டு வீரர்கள் மட்டுமே தக்கவைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அந்த அணி பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரை தக்க வைக்க அதிக முனைப்பு காட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன. 


 


மும்பை இந்தியன்ஸ்:




ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸ் 4 வீரர்களில் 3 பேரை உறுதி செய்ததாக தெரிகிறது. கேப்டன் ரோகித் சர்மா, பொல்லார்டு மற்றும் பும்ரா ஆகிய மூன்று பேரும் நிச்சயம் தக்கவைக்கப்பட உள்ளனர். அவர்களுடன் சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் தக்கவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாண்டியா சகோதரர்களை மும்பை அணி தக்கவைக்கும் வாய்ப்பு குறைவு என்று தெரிகிறது. 


 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:






சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக 2 வீரர்களை மட்டுமே தக்கவைக்க அணி நிர்வாகம் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது. கேன் வில்லியம்சன் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரை மட்டும் அந்த அணி தக்கவைக்க போவதாக தெரிகிறது. மற்ற வீரர்கள் யாரையும் அந்த அணி தக்கவைக்கும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. 


 


இப்படி 8 அணிகளும் தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அளித்த பின்பு புதிய இரண்டு அணிகள் வீரர்களை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளும் 2 இந்திய வீரர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளுக்கும் டிசம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் முடிந்த பிறகு ஜனவரி மாதத்தில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இருக்கும் என்று கருதப்படுகிறது. 


மேலும் படிக்க: ஐ.பி.எல் 2022: மீண்டும் முதல் போட்டியில் மோதும் சென்னை - மும்பை....பின்னணி என்ன?